எடப்பாடியை எதிர்த்து களத்தில் ஓபிஎஸ்..? “இதான் எங்க பிளான்” - அதிரடி முடிவெடுத்த ஓபிஎஸ் அணி!
ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தாலும், ஓபிஎஸ் போட்டியிடப்போவதில்லை என ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உட்பட அவரது தரப்பினர் யாரும் போட்டியிட முடியாது என்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
மேலும், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் அணியினர் வந்து பிரச்சனையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறை பாதுகாப்பையும் பலப்படுத்தக் கோரியுள்ளது ஈபிஎஸ் அணி.

இடைக்கால பொதுச்செயலாளர்
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளரும் செயல்பட்டு வந்தனர். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல்
அதோடு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தும் எடப்பாடி முயற்சிகளுக்கு அணைபோட முடியவில்லை. இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21ஆம் தேதி மாலை 3 மணி வரை திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின்றி தேர்வு?
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினமே வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று அதிமுக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு நாளை மதியம் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விதிகள்
பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினர், கட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். குறைந்தது 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டக் கழகச் செயாளர்கள் வழிமொழிய வேண்டும் என்ற விதிமுறைகளையும் ஈபிஎஸ் அணி கடந்த பொதுக்குழுவில் வகுத்திருப்பதால் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

யார் வேண்டுமானாலும்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் சட்ட விதிகளின்படியே பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது என்றும், ஜனநாயக முறையில் இந்த தேர்தல் நடைபெறும் என்றும், பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் போட்டியிடப் போவதில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் அணி போட்டி?
அதே நேரம் இந்த தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களின் அடிப்படை உறுப்பினர் தகுதி காலாவதி ஆகிவிட்டது. அதனால் ஓபிஎஸ்க்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. அவரும் அவர் அணியைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார் ஜெயக்குமார். மேலும், வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழேந்தி மறுப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் தரப்பில் போட்டியிட போவதாக வெளியான தகவலை ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மறுத்துள்ளார். "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பு பதவிகள் தொடர வேண்டும் என்பதே எங்கள் முடிவு. நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். பொதுச்செயலாளர் தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடுவதாக வெளியான செய்தி தவறு. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

வழக்கு
இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை காலை விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல் எனத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications