இப்போதைக்கு அடங்கிய தலைவர் பஞ்சாயத்து.. 6 மாசம் டைம் இருக்கு.. ப.சிதம்பரத்திற்கு வாய்ப்பு இருக்குமா?
மூத்த தலைவர் ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைவராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
சென்னை: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலக விருப்பம் தெரிவித்திருந்த நிலையில்... மீண்டும் அவரே 6 மாத காலத்துக்கு தலைவராக நீடிப்பார் என்று காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.. மேலும், புதிய தலைவரை நியமிக்க சோனியா காந்தி சொல்லி உள்ள நிலையில், ப.சிதம்பரம் அடுத்த தலைவராக உருவெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழிநடத்த வேண்டும் என்று ஒரு தரப்பும், இனி அந்த குடும்பத்தில் இருந்து யாருமே தலைமை பொறுப்புக்கு வரக்கூடாது என்று ஒரு தரப்பும் மாறி மாறி பேச ஆரம்பித்துள்ளன.. இதற்கு நடுவில், எத்தனையோ முறை முதல்வர் பொறுப்பை வகித்தவர்களும், எம்பிக்களாக பதவி வகித்தவர்களும், இந்த தலைமை பதவிக்கு ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.
அதில், அசோக் கெலாட், கமல்நாத், ஏகே ஆண்டனி, சசிதரூர் என்று வரிசை நீண்டு கொண்டே போனாலும், கர்நாடகத்தின் மல்லிகார்ஜுன கார்கே, தமிழகத்தின் ப.சிதம்பரத்தின் பெயர் சில தினங்களாகவே அடிபட்டு வருகிறது.. ஆனால் இதற்கு நிறைய எதிர்ப்புகளும், சலசலப்புகளும் கிளம்பி வருகின்றன. அதற்கு நிறைய காரணங்களும் உள்ளன.

காங்கிரஸ்
டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஒன்றில்கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை.. மாறாக, ஆம்ஆத்மி அமோக வெற்றி பெற்றது.. அப்போது, டெல்லி மக்களுக்கு சல்யூட் அடிப்பதாக சிதம்பரம் சொன்ன வாழ்த்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.. போதாக்குறைக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசைப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டன.

சோனியா காந்தி
இருந்தாலும், சிதம்பரத்திடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க சோனியாவே ஒருகட்டத்தில் முன்வந்தாகவும் செய்திகள் கசிந்தன.. ராஜீவின் மிக நெருங்கிய நண்பரான சிதம்பரத்தின் மீது சோனியாவுக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு.. இதற்கு ஒரு சம்பவத்தை கூட உதாரணமாக சொல்லலாம்:

பிரணாப் முகர்ஜி
சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சமயம் அது.. நிதியமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர் ஆ.ராசாவிடம் உரையாடிய விவரங்களையும், சிதம்பரம் எழுதிய குறிப்புகளையும் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படவும், மத்திய அரசுக்கு பெரிய தலைவலி அன்று உருவானது.. சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு ரகளையே பாஜக அன்று நாடாளுமன்றத்தில் செய்தது.. நாடு திரும்பிய சோனியா முதல் வேலையாக இதில் தலையிட்டு, பிரணாப் முகர்ஜியின் விஷமத்தனத்தை புரிந்து கொண்டார்.. அவரை அழைத்து கடிந்து கொண்டார்.. சிதம்பரத்தை அழைத்து சமாதானம் செய்து கொள்ளுமாறு அட்வைஸ் தந்தவர்!

சப்போர்ட்
இப்படி ப.சிதம்பரத்துக்கு அப்போது முதலே சப்போர்ட் செய்து வந்ததால்தான், இவரிடமே பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று சோனியா கருதி உள்ளார்.. அதனால்தான் இன்றும் தலைமை பதவி லிஸ்ட்டில் உள்ளவர்களில் ப.சிதம்பரம் பெயர் தவிர்க்க முடியாமல் உள்ளது.

சர்வதேச அரசியல்
இந்த காரணங்களுக்காக மட்டுமில்லை.. பாஜகவை சித்தாந்த ரீதியாக மட்டுமல்லாமல், சர்வதேச அரசியல், பொருளாதார ரீதியாகவும் நாசூக்காகவும், அதிரடியாகவும் கையாளக்கூடிய சரியான நபராக இருப்பார் என்பதும் சிதம்பரம் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை ஆகும்.. சமீப காலமாக, அதாவது சிதம்பரம் திகாருக்கு சென்று வந்ததில் இருந்தே, அவரது ஒவ்வொரு பேட்டியும், கருத்தும், விமர்சனங்களும் பாஜகவை நிலைகுலைய வைத்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

எதிர்வினை
பிரதமர் நரேந்திர மோடியின் ஒவ்வொரு அசைவுக்கும், சிதம்பரத்தை போல் எதிராக குரல் கொடுப்பவர் யாரும் இல்லை.. இப்படி உடனுக்குடன் எதிர்வினை ஆற்றுவதும், புள்ளிவிவரங்களுடன் தகவலை எடுத்து வைத்து அவர்களை நறுக்கென கேள்வி கேட்கவும் சிதம்பரத்துக்கு கூடுதல் தகுதியும் உள்ளதாகவே கூறப்படுகிறது. காரணம் பாஜக தரப்பில் மற்றவர்களை விட புள்ளிவிவரத்துடன் யாராவது பேசினால் அவர்களைப் பார்த்துதான் அதிகம் பயப்படுவார்கள். எனவே உடனுக்குடன் கவுன்டர் கொடுக்கும் ப.சிதம்பரம் மீது அவர்களுக்கு ஒரு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கிறது.

குழப்பம்
ஆனால், இவரை தலைமை பதவியில் உட்கார வைப்பார்களா? தமிழகத்தை சேர்ந்த ஒருவரை முதன்மைப்படுத்தினால் அகில இந்திய அளவில் காங்கிரஸார் அதை ஏற்பார்களா என்ற குழப்பமும் உள்ளது. காரணம், என்ன இருந்தாலும் தென்னிந்தியர் ஒருவரை தலைவராக ஏற்க வட இந்திய மூத்த தலைவர்கள் முன்வர மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.. அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி தென்னிந்தியத் தலைவர்களின் தலைமையை ஏற்க வட இந்தியத் தலைவர்கள் ஒத்துக் கொள்வதே கிடையாது.. பி.வி.நரசிம்மராவ் மட்டும் இதில் விதி விலக்காக இருந்தார்.

தமிழர்
அதேசமயம், சோனியா மனது வைத்தால்,. காரிய கமிட்டியினர் ஏற்றுக் கொண்டால் வேட்டி கட்டிய தமிழர் காங்கிரஸின் தலைவராவார் என்பதுடன் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு நெருக்கடியும் தர முடியும் என்பது உண்மைதான்.












Click it and Unblock the Notifications