செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தீபாவளிக்காவது கிடைக்குமா? அண்ணாமலை சொல்லும் டிப்ஸ்
சென்னை: செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு ஒவ்வொருமுறையும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடல்லையே இல்லையாம் என்று அவரது எதிராளிகள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். வாட்ச் பில் கேட்ட செந்தில் பாலாஜியின் நிலை இப்படி ஆகி விட்டதே என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் பதிவிட்டாலும் அவருக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்றால் முதல்வர் ஒரு விசயம் செய்ய வேண்டும் என்று டிப்ஸ் கூறியுள்ளார் அண்ணாமலை.
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று செந்தில் பாலாஜி படாத குறையாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என தொடர் சோதனைகளாக இருக்கிறது. தலைமறைவான அவரது தம்பியை தேடி வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தாலும் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்வது போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கம்பீரமாக வலம் வந்தவர் தற்போது நீதிமன்றத்திற்கும் புழல் சிறைக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். கூடவே உடல் நலக்குறைபாடும் வாட்டி வதைக்கிறது. இதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் கால் வலியும் இருப்பதாக கூறி வருகிறார் செந்தில் பாலாஜி. நான்கு மாத காலமாக சிறையில் தவித்து வருகிறார் செந்தில் பாலாஜி.
தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாகக் குணமடையாத சூழலில், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமின் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 6ஆம் தேதிவரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 9 வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டார். தீபாவளிக்கு முன்பாக எப்படியாகது ஜாமின் பெற்று விட வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு முயற்சி செய்து வருகிறது. தற்போது ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளார் செந்தில் பாலாஜி.
இதனிடையே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காமல் இருப்பது பற்றி கருத்து கூறியுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அவர் தமிழக அமைச்சராக நீடிப்பதால்தான் ஜாமின் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, அப்போதுதான் அவருக்கு ஜாமின் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications