ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் அதிகரிப்பு.. ஆளுநர் செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்டுவோம்.. முத்தரசன்
ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டப்படும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
அதேபோல் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று பதில் அளித்துள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அமமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் விமர்சித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

சிபிஐ ஆர்ப்பாட்டம்
அதுமட்டுமல்லாமல் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

ஆர்எஸ்எஸ் தூதுவர்
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது: 44 பேர்களின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தமிழ்நாடு ஆளுநரை திருப்பி அனுப்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அவர், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தூதுவராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

கருப்புக் கொடி காட்டுவோம்
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய ஆளுநர், சூதாட்ட நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தற்கொலையை தூண்டும் விதமாக செயல்படுகிறார். உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லை என்றால் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புகொடி காட்டுவோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications