தள்ளிப்போகிறதா பிளஸ் 2 தேர்வு ? இன்று தமிழக அரசு முக்கிய ஆலோசனை
சென்னை: கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை முதல் அலையைவிட மிகமிக உச்சம் பெற்று வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லி, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுமே இப்போது கொரோனா பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டன. பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துகின்றன. தேர்வுகளுமே ஆன்லைனில் தான் நடக்கின்றன
ஆல் பாஸ் அறிவிப்பு
தமிழகத்தில் 11ம் வகுப்பு வரை தேர்வுகள் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. பள்ளி அளவில் தேர்வுகள் நடந்துள்ளன. ஆல் பாஸ் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துவிட்டது. கல்லூரிகளுக்கு அப்படியில்லை. ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடக்கின்றன.
பிளஸ்2 தேர்வு ஒத்திவைப்பு
இந்நிலையில் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. டெல்லி உள்பட மாநில அரசுகளும் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் மத்திய அரசு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
தமிழக அரசு ஆலோசனை
இந்நிலையில் தமிழகத்திலும் 12ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து இன்று தமிழக அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
ஒத்திவைக்கப்படுமா?
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். எனவே பிளஸ் 2 தேர்வுகள் 4ம் தேதி முதல் தொடங்குமா அல்லது காலவரையின்றி ஒத்திவைக்கப்படுமா என்பது இன்று தெரியும்.