பேசாம ஒத்தி வைக்கலாமே.. டிசம்பருக்கு பிறகு பாத்துக்கலாமே.. ஹைகோர்ட் சூப்பர் அட்வைஸ்
பள்ளிகள் திறப்பது குறித்து மதுரை ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது
சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து, மதுரை ஹைகோர்ட் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.. அத்துடன் ஒரு ஆலோசனையையும் கோர்ட் வழங்கி உள்ளது!
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும் 16ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால், கொரோனா தொற்று இன்னும் முழுமையாக அகலவில்லை என்பதால், அரசின் அறிவிப்புக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதனால், இந்த விவகாரம் குறித்து பெற்றோரிடமே கருத்து கேட்கலாம் என்று அரசு முடிவு செய்தது.. அதன்படியே தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், பொதுமக்களிடம் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டமும் நடந்து முடிந்தது.
அப்போது, "குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளதால் கொரோனா பரவலும் அதிகரிக்கும், பொங்கல் லீவு முடிந்தபிறகே பள்ளிகளை திறக்கலாம்" என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்... அதாவது இப்போதைக்கு பள்ளி திறக்க கூடாது என்பதே ஒருமித்த கருத்தாக உள்ளது. பெற்றோர்களின் இந்த முடிவுகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கு விருப்பமில்லை என்பதால், திட்டமிட்டபடி நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்து வருகிறது.. எனினும், பள்ளிகள் திறப்பு தொடர்பாக நவம்பர் 12-ம் தேதிக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று நேற்று அமைச்சர் செங்கோட்டையனும், பேட்டி தந்திருந்தார். இதையேதான் அமைச்சர் அன்பழகனும் தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பான வழக்கு ஒன்றின் மீது இன்று மதுரை ஹைகோர்ட்டில் விசாரணை நடந்தது.. அப்போது, பள்ளிகள் திறப்பதை ஒத்திவைத்தால் என்ன? என்று தமிழக அரசுக்கு கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும் பெற்றோர்கள் கருத்து சொன்னது போலவே, டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமே என்றும் அரசுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளது.
கோர்ட் இப்படி ஒரு கேள்வி எழுப்பி ஆலோசனையும் தந்துள்ளதால், மறுபடியும் பள்ளிகள் திறக்கப்படும் முடிவு தள்ளிப்போகுமோ என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.