தவணை முறையில் வீடுகள் விற்பனை நிறுத்தம்? தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவால் ஏழைகளுக்கு பாதிப்பு?
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு தவணை முறையில் பணம் பெற்று வந்த நிலையில் இனி அது போல் தவணை முறையில் பணம் பெறுவது நிறுத்தப்படுவதாக தமிழக வீட்டு வசதி வாரியம் அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை.
தமிழக மக்களின் வாங்கும் திறனுக்கேற்ற விலையில் வீட்டு வசதி திட்டங்களை உருவாக்கி மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்கிறது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். மக்கள் நெருக்கத்தை குறைக்கவும், மாபெரும் நகரங்களின் வளர்ச்சியை ஒழுங்குப்படுத்தவும் மற்றும் சிறந்த முறையில் வீட்டு வசதி செய்து தருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் அல்லது மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோருக்கு தவணை முறை திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வந்தது.
இந்த திட்டத்தின் கீழ் வீட்டு வசதி வாரியத்தால் பொதுமக்கள் வாங்கத்தக்க விலையில் வீடுகள் வழங்கிடும் அரசின் முயற்சியை நிறைவேற்றியும் பொருட்டு சுயநிதித் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போல் தவணை முறையில் பணம் வசூலிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி அந்த முடிவை கைவிட வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தவணை முறையில் பணம் வசூலிப்பதில் சிக்கல் இருப்பதால் வீட்டு வசதி வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறதாம்.
இதனால் கூடுதலாக 20 சதவீதம் வரை வீடுகளை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தவணை முறையில் வீடுகள் விற்பனை செய்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை.












Click it and Unblock the Notifications