ஆளுநர் தேநீர் விருந்து.. முதன்முறையாக பறந்த அழைப்பு! பங்கேற்பாரா தவெக தலைவர் விஜய்? வெளியான தகவல்
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கும் நிலையில் விஜய் பங்கேற்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த அந்த நாளன்று அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

இந்நிலையில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி சென்னை கிண்டியிலுள்ள ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பதாக ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்றது கடுமையான விமர்சனங்களை பெற்றது. ஆளுநருடைய கருத்தியல் சார்ந்த விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால் ஆளுநர் பதவியின் மீதும் அந்த பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். அந்த கோட்பாடுகளின் அடிப்படையில் ஆளுநருடைய தேநீர் விருந்தில் நாங்கள் கலந்து கொண்டோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து இருந்தார்.
ஆனால் அது பலத்த எதிர்வினைகளை பெற்றதால் இந்த ஆண்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் முதல் முறையாக கட்சி தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் ஆளுநரை தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வாரா இல்லை புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
தற்போது கிடைத்த தகவல்களின்படி விஜய் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். தமிழகத்தில் திமுகவுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜகவையும் விஜய் விமர்சித்து வருகிறார். மாநாட்டின் போதும் ஏன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரந்தூரில் மக்களை விஜய் சந்தித்தபோதும் பாஜகவையும் திமுகவையும் விஜய் விமர்சித்து பேசியிருந்தார்.
அதே நேரத்தில் கடந்த டிசம்பர் 30ம் தேதி ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக ஆளுநர் பதவி தேவையில்லை என பேசி இருந்த விஜய் ஆளுநரை சந்தித்து மனு அளித்தது விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கும் நிலையில் விஜய்யும் புறக்கணிப்பார் என்கின்றனர். அதே நேரத்தில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான அதிமுக இதுகுறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications