திருமாவளவன் கண்டார் ஸ்டாலினை.. கசப்புகள் தீர்ந்ததா.. உறவுகள் உறுதியானதா?
சென்னை: திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் போல சந்திப்பு என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அது தவறு.
இந்த சந்திப்புக்கு முன்னர் ஏற்பட்ட சில மனகசப்புகளை சரி செய்வதற்கே இந்த சந்திப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே விரிசல் என்ற தகவல்களுக்கு பின்னால் ஆழமாக இருப்பது பொருளாளர் துரைமுருகனின் பேட்டிதான்.
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அவர் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளும் தோழமை கட்சிகளே என்று தெரிவித்திருந்தார்.
தோற்றம்
துரைமுருகனின் இந்த கருத்து திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மதிமுகவையும் விடுதலைச் சிறுத்தைகளையும் திமுக எங்கோ ஒரு மூலையில் வைத்து பார்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியது. எனினும் இந்த கருத்துக்கு ஸ்டாலின் எந்த வித மறுப்பையும் தெரிவிக்காதது மேலும் சர்ச்சையை கிளப்பியது. திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும் என வைகோ கேட்டுக் கொண்டார். எனினும் அவர் மவுனம் காத்து வந்தார்.
ஆத்திரம்
இது போன்ற கூட்டணி முறிவு என்ற சர்ச்சைகள் எழ காரணம் சிறுமி ராஜலட்சுமியின் மரணத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் வாய் திறக்காதது திருமாவை மிகவும் பாதித்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கொதித்து போய் சில வார்த்தைகளை பேசிவிட்டார்.
விசிகவை
அதாவது பொது வாழ்க்கையில் இருப்பதற்கே இவர்கள் லாயக்கற்றவர்கள். ராஜலட்சுமி குறித்து பேசினால் தங்களுக்கு ஓட்டு கிடைக்காது என நினைப்பதுதான் இவர்களின் மவுனத்துக்கு காரணம் என்று கூறிவிட்டார். மேலும் விசிகவை திமுக கூட்டணியில் சேர்க்காமல் இருப்பதற்காக திமுக நிர்வாகிகள் திரைமறைவில் செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்ததும் திருமாவளவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
துரைமுருகன் எப்படி பேசுவார்
மேலும் ஸ்டாலின் சொல்லாமல் துரைமுருகன் இப்படி சொல்ல மாட்டார். அதையும் மீறி பேசுகிறார்கள் என்ற அந்த தலைமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுமாறு விசிக நிர்வாகிகள் திருமாவிடம் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இதைத் தொடர்ந்துதான் நேற்று ஸ்டாலினை திருமா சந்தித்து பேசினார். அப்போது பொருளாளர் பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளாதீர் என திருமாவளவனிடம் ஸ்டாலின் கூறியுள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.