இது லிஸ்ட்லயே இல்லையே! அஜித் குமார் குடும்பத்துக்கு ஆறுதல்.. சிவகங்கை சென்ற விஜய்!
சென்னை: சிவகங்கை அஜித்குமார் மரண விவகாரம் தமிழ்நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாளை இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்து. இந்நிலையில், அஜித் குமாரின் குடும்பத்தினரை விஜய் இன்று நேரில் சென்று சந்தித்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாதுகாவலராக அஜித்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 28ஆம் தேதி அந்த கோவிலுக்கு மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் வந்திருக்கிறார்.
அப்போது அவர்களுக்கு வீல் சேர் மற்றும் பார்க்கிங் செய்ய காவலர் அஜித் குமார் உதவியதாகக் கூறப்படுகிறது, இந்த நிலையில் காரின் பின் சீட்டில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என அந்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் பாதுகாவலர் அஜித்குமாரையும் காவல்துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யாத போலீசார் அஜித் குமாரை இரண்டு நாட்கள் காவல்துறை வாகனத்தில் வைத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் திமுக கவுன்சிலர் ஒருவரது தோட்டத்து வீட்டில் அஜித்குமாரை அடைத்து வைத்து கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் காவல்துறையினர் தான் அஜித்குமாரை கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர். தமிழக எதிர் கட்சிகளும் இது தொடர்பாக குரல் எழுப்பிய நிலையில் நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அஜித்குமாரை தாக்கியதாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக பாஜக சிவகங்கையில் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது.
அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய், ஆலோசனையின் பேரில் நாளை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சிவகங்கை காவல் நிலைய மரணத்தை கண்டித்து போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் வேறு ஒரு அமைப்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இருப்பதால் வேறு தேதியை கேட்கும் படி காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்ட தேதி மாற்றப்பட்டு இருக்கிறது. வரும் ஆறாம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு இடையே இந்த போராட்டத்தில் விஜய் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து மாநாட்டையும் நடத்தி முடித்து 250 நாட்கள் கடந்து இருக்கும் நிலையில் விஜய் இதுவரை பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்ததை தவிர வேறு எந்த கள அரசியல் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை.
இடையில் புத்தக வெளியீட்டு விழா கட்சி, ஆலோசனை கூட்டம் என இன்டோர் ஆலோசனைக் கூட்டங்களை மட்டும் பங்கேற்று வருகிறார். பொதுவெளிக்கு வராதது விஜய் மீதான விமர்சனங்களை அதிகப்படுத்தியது. மேலும் அஜித்குமார் மரணம் தொடர்பாக முதலில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை விட்ட நிலையில் அதற்கு இரண்டு நாட்கள் கழித்து தான் விஜய் அறிக்கை விட்டார். இந்த நிலையில் திமுக-வை நேருக்கு நேர் கிடைத்திருக்கும் வாய்ப்பை விஜய் பயன்படுத்திக் கொள்வாரா? ஆர்ப்பாட்டத்தில் நேரில் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் விசாரித்த போது விஜய் நிச்சயம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார். மேலும் ஏற்கனவே இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். ஆனால் விஜய் வருகிறார் என்ற தகவல் தெரிந்தால் அதிக அளவில் கூட்டம் கூடிவரும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் முன்னரே தெரிவிக்காமல் அந்த குடும்பத்தினரை விஜய் சந்திப்பது வழக்கம்.
அந்த வகையில் சிவகங்கையில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசி உள்ளார். இதற்காக அவர் சிவகங்கை மடப்புரம் சென்று, அஜித் குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கி உள்ளார். மேலும் ஆர்ப்பாட்டத்திலும் விஜய் கலந்து கொள்வார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications