Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கு செம சான்ஸ்! இடைத்தேர்தலில் தவெக? திமுக, அதிமுகவை உச்சத்தில் ஏற்றியதே இடைத்தேர்தல் தானே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயதரணி கட்சி தாவல் காரணமாக அவர் எம்.எல்.ஏ பதவியை இழப்பதால் விரைவில் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காணுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. திமுக, அதிமுகவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையை கொடுத்து, ஆட்சிக் கட்டிலுக்கு வழி போட்டுக் கொடுத்தவையே இடைத்தேர்தல்கள் தான். விஜய் அந்த வழியை பின்பற்றுவாரா?

அண்மையில், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடாது என்றும், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அறிவித்துள்ளார் விஜய். இதையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Will Vijays TVK contest in by election? Here is How dmk and aiadmk got CM seat

2 இடைத்தேர்தல்கள்: இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழக சட்டசபைக்குள் நுழைய அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி, பாஜகவுக்கு தாவியுள்ளதால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியை அவர் இழப்பார். இதனால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி காலியாகும். இதையடுத்து, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி அங்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதேபோல, முன்னாள் அமைச்சர் பொன்முடி, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டதால் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இழக்கிறார் பொன்முடி. இதனால் பொன்முடி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாகும்.

விஜய்க்கு அருமையான வாய்ப்பு: தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம், ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தால், பொன்முடியின் எம்.எல்.ஏ பதவி காலியாகி, திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, சட்டசபை செயலகம் பரிந்துரை செய்து, தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு, தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடும்.

இப்படியாக, விரைவில் தமிழ்நாட்டில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்த சில மாதங்களில் இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்படக் கூடும். அப்படி நடந்தால், தமிழக வெற்றிக் கழகம், 2026ல் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, 'ஒரு வார்ம் அப்' வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.

இடைத்தேர்தல் திருப்பு முனைகள்: தமிழ்நாட்டை கடந்த அரை நூற்றாண்டு காலமாக மாறி மாறி ஆண்டு வரும் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்குமே, இடைத்தேர்தல்கள் பெரிய திருப்புமுனையைக் கொடுத்திருக்கின்றன. திமுகவுக்கு திருவண்ணாமலை இடைத்தேர்தல் என்றால் அதிமுகவுக்கு திண்டுக்கல் இடைத்தேர்தல்.

எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய புதிதில், 1973ல் திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதுதான், அதிமுக போட்டியிட்ட முதல் தேர்தல். இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி ஜெயிக்கும் என்ற பொது வழக்கத்தை உடைத்து வென்றது அதிமுக. அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ஆளும் கட்சியான திமுக வேட்பாளர் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அடுத்து எம்ஜிஆர் ஆட்சி: தமிழ்நாட்டின் அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இடைத்தேர்தல் என்ற பெருமை இன்றளவும் திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு உள்ளது. அதன்பிறகு. 1974ல் கோயம்புத்தூர் மேற்கு சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன்பிறகு 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு, எம்ஜிஆர் மறைவு வரை அதிமுக ஆட்சியை அசைக்க முடியவில்லை.

அதிமுகவுக்கு இப்படி என்றால், திமுகவுக்கும் ஆரம்ப காலத்தில் இடைத்தேர்தல் கை கொடுத்திருக்கிறது. 1957 முதல் திமுக தேர்தலில் போட்டியிட்டு வந்தது. முதல் தேர்தலில் திமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சைகளாக போட்டியிட்டு 2 பேர் வென்றனர். 1962 பொதுத் தேர்தலில் 13 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபைக்குச் சென்றது திமுக. காங்கிரஸ் கட்சி காமராஜர் தலைமையில் ஆட்சி அமைத்தது.

திமுகவுக்கு நடந்த அதிசயம்: அதன்பிறகு நடந்தது ஒரு திருப்பம். 1963ஆம் ஆண்டு திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி பிள்ளை காலமானதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிரமாக தேர்தல் பணியாற்றியது.

ஆனால், இடைத்தேர்தல் முடிவு ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கும், அன்றைய முதல்வர் காமராஜருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. திமுக சார்பில் போட்டியிட்ட ப.உ.சண்முகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தல் வெற்றியை திருவிழா போல கொண்டாடியது திமுக. தமிழகம் முழுக்க வெற்றிப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அண்ணா சொன்னது பின்னால் நடந்தது: "காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து வருகிறது என்பதையே இந்த இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது. இனி வரப்போவது திமுக ஆட்சி தான். காங்கிரஸ் இனி எழுந்திருக்கவே முடியாது" என திமுக தலைவர்கள் மேடைகள் தோறும் முழங்கினர். அடுத்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு ஓடுகிற அளவிற்கு தி.மு.கழகம் பலம் பெற்று வருகிறது என்று பேசினார் அண்ணாதுரை.

அண்ணா சொன்னதுதான் பின்னால் நடந்தது. 1967 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு, காங்கிரஸால் தமிழ்நாட்டில் ஆட்சி அரியணையை தொடக் கூட முடியவில்லை. இன்றளவும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது கனவாகவே இருந்து வருகிறது.

Will Vijays TVK contest in by election? Here is How dmk and aiadmk got CM seat

இடைத்தேர்தல் - எதிர்கால வரலாற்றை நிர்ணயிக்கும் தேர்தல்: இப்படி, ஒரே இடைத்தேர்தல், அகில இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி, ஒரு நூற்றாண்டு கட்சியையே, அரை நூற்றாண்டாக இங்கு ஆட்சிக்கு வர விடாமல் செய்திருக்கிறது. அதேபோலத்தான், அதிமுகவுக்கு, திண்டுக்கல், கோவை இடைத்தேர்தல்கள் அளித்த முடிவும். இடைத்தேர்தல்கள் தான் இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தை நோக்கிய பாதையை அமைத்துக் கொடுத்திருக்கின்றன என்பது வரலாறு.

இந்நிலையில் தான், விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இருக்கும் இந்தத் தருணத்திலும் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாய்ப்புகள் வருகின்றன. தமிழ்நாட்டை ஆளும் கனவோடு, எம்ஜிஆரின் பாதையில் சினிமா - அரசியல் என பாலிடிக்ஸுக்கு வந்திருக்கும் விஜய், இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, இடைத்தேர்தல் களத்தில் இறங்குவாரா? திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடைத்தேர்தல் பொழிந்த பூமழை வரவேற்பைப் பெறுவாரா? அல்லது, 2026 சட்டசபை பொதுத் தேர்தல் தான் இலக்கு எனக் கூறி இடைத்தேர்தலையும் புறக்கணிப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+