வில்லங்கமாய் வந்த வில்சன்.. கணவனுக்கு காதலன் வைத்த 'பெல்ட்' விருந்து.. மேரி போட்ட ஸ்கெட்ச்
சென்னை: மனித உறவுகளுக்கு இடையே ஏற்படும் விரிசல்களும், தவறான பாதையில் செல்லும் ஈர்ப்புகளும் எந்த அளவுக்கு ஒருவரைத் தடம் புரளச் செய்யும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. மகிழ்ச்சியான குடும்பத்துக்குள் நுழையும் மூன்றாவது நபரால் ஏற்படும் விளைவுகள், எதிர்பாராத வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுத்து ஒரு உயிரையே பறிக்கும் நிலைக்கு சென்றுவிடுகிறது.. சமூகத்தில் பெருகி வரும் இத்தகைய குற்றப் பின்னணிகள், தனிமனித ஒழுக்கத்தை கேள்விகுறியாக்கி வருகின்றன.. ஆந்திராவில் அப்படி என்னதான் நடந்தது?
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் கைப்பா பகுதிக்கு அருகே, உடல் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடப்பதாகக் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நந்திவர்க்கம் காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்... முதற்கட்ட விசாரணையில், யாரோ ஒரு மர்ம நபரைக் கொலை செய்து, உடலைச் சாக்குப்பையில் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துத் தடயங்களை அழிக்க முயன்றது தெரியவந்தது.

மேரி தம்பதி
இறந்தவர் யார் என்ற தீவிர விசாரணையில், டோன் நகரைச் சேர்ந்த வில்சன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, வில்சனின் அம்மா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
11 வருஷங்களுக்கு முன்பு மேரி என்பவருடன் திருமணமாகி உள்ளது வில்சனுக்கு.. 10 வயதில் மகனும், 4 வயதில் மகளும் இந்த தம்பதிக்கு உள்ளனர். மேரி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது, அங்கு நந்தியாலாவைச் சேர்ந்த மது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
தறிகெட்ட காவல் விவகாரம்
தறிகெட்டுப் போன இவர்களின் காதல் விவகாரம் வில்சனுக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக அந்தத் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை ஒழித்துக்கட்ட மேரி முடிவு செய்தார். இதற்காக தனது காதலன் மதுவுடன் சேர்ந்து ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டினார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மது தன்னுடைய நண்பர்களான ரபி மற்றும் அசோக் ஆகியோரின் உதவியை நாடினார்.
சம்பவத்தன்று, ரபியும் அசோக்கும் வில்சனுக்கு போனை போட்டு, மது அருந்த வருமாறு அழைத்துள்ளனர். அவர்கள் விரித்த வலையில் சிக்கிய வில்சன், அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
வில்சனுக்கு மேரி போட்ட பிளான்
வில்சன் போதையில் தள்ளாடிய தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த பெல்ட்டை எடுத்து அவரது கழுத்தில் போட்டு இறுக்கியுள்ளனர். மூச்சுத் திணறிய வில்சன் அங்கேயே துடிதுடித்து உயிர் இழந்தார். பிறகு கொலையை மறைக்க, உடலைச் சாக்குப்பையில் கட்டி கைப்பா பகுதிக்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
ஆரம்பத்தில் மேரி எதையுமே போலீசில் சொல்லாதபோது, இறுதியில் மேற்கண்டவற்றை வாக்குமூலமாக தெரிவித்தார்.. இதையடுத்து மேரி, அவரது காதலன் மது மற்றும் நண்பர்களைக் காவல்துறையினர் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலுக்காக இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை அனாதையாக்கி, கணவனையே கொன்ற மனைவியின் செயல் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications