திருவொற்றியூர், விம்கோவுக்கு மெட்ரோவில் போறீங்களா? ரயில் சேவையில் மாற்றம்! முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை விம்கோ நகர் - விம்கோ நகர் பணிமனைக்கு செல்லும் தடத்தில் மின் விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கடந்த 2015ல் தொடங்கப்பட்டதுதான் இந்த சென்னை மெட்ரோ அமைப்பு. இது தற்போது புளூ லைன் 1 மற்றும் கிரீன் லைன் 2 என இரண்டு பயன்பாட்டு மெட்ரோ பாதைகளையும் மூன்று கட்டுமானப் பாதைகளையும் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் இதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மெல்ல இந்த எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தது.

இதனால் பெண்களுக்கு முக்கியத்துவம், விழா கால சலுகை மற்றும் கூடுதல் ரயில்கள் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தது. எனவே சென்னை மக்களின் வாழ்க்கையில் மெட்ரோ ரயில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து வருகிறது. இந்நிலையில் நீல நிற வழித்தடத்தில் உள்ள விம்கோ நகரில் தற்போது மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நீல நிற வழித்தடத்தை பொறுத்த அளவில், வடசென்னையின் டோல்கேட் மெட்ரோ நிறுத்தத்திலிருந்து விம்கோ நகர் வரை ஒருவழிப்பாதை மெட்ரோதான் இருக்கிறது. எனவே, டோல்கேட்-விம்கோ நகர் வரை 18 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் விம்கோ நகர் - விம்கோ நகர் பணிமனைக்கு செல்லும் தடத்தில் மின் விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருவொற்றியூர், விம்கோ நகர் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே மாநகரின் கடைசியில் உள்ள இம்மக்கள் வேலைக்காக நகரின் மையத்திற்கு வருவதற்கு கடும் சிரமங்களை எதிர்க்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது மெட்ரோ சேவையும் நிறுத்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள மெட்ரோ நிர்வாகம், மின் விநியோக பிரச்னையை சரிசெய்ய ஊழியர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள் என்றும், விரைவில் பிரச்னை சரி செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications