காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 9 மாவட்டங்களில் கன மழை.. வானிலை மையம் எச்சரிக்கை
Recommended Video

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் நிலைகொள்ளும்.

அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் 8 சென்டி மீட்டர், மணிமுத்தாறு பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு பரவலாக மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications