சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் மீது விண்டிராக் நிறுவனம் லஞ்ச புகார்! விளக்கம் கொடுத்த சுங்கத்துறை
சென்னை: சென்னையைச் சேர்ந்த இறக்குமதி சேவை நிறுவனமான வின்ட்ராக் இன்க் (Wintrack Inc) சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதால் தங்களது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறி, சமூக வலைதளத்தில் அறிவித்ததால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக சுங்கத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதால், சேவையை நிறுத்திக்கொள்வதாக, வின்ட்ராக் என்ற சரக்கு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த லஞ்ச புகாரை சென்னை சுங்கத்துறையினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

வின்ட்ராக் இன்க் என்பது லாஜிஸ்டிக்ஸ் சேவை அளிக்கும் கார்கோ நிறுவனம். இது வாடிக்கையாளர்கள் அலிஎக்ஸ்பிரஸ், அலிபாபா, லாசாடா மற்றும் ஷாப்பி தாய்லாந்து போன்ற தளங்களிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய உதவுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் தமது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது கடுமையான லஞ்சப் புகாரை சுமத்தி இருக்கிறது.
இது குறித்து வின்ட்ராக் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அக்டோபர் 1 ஆம் தேதி முதல், எங்கள் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை நிறுத்தி உள்ளது. கடந்த 45 நாட்களாக, சென்னை சுங்க அதிகாரிகள் எங்களை இடைவிடாமல் துன்புறுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு இரண்டு முறை, அவர்களது லஞ்சம் வாங்கும் நடவடிக்கையை அம்பலப்படுத்தினோம். இதனால் அவர்கள் எங்களை பழிவாங்கினர். சேவையை தொடர கடினமாக முயற்சிகள் செய்த போதிலும், தொடர்ச்சியான தொந்தரவுகள் காரணமாக எங்களது சேவையை தொடர முடியாமல் போனது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வின்ட்ராக் இன்க் நிறுவனர் பிரவீன் கணேன் சிறப்பு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சிலரின் பெயரை குறிப்பிட்டு, லஞ்ச புகாரை முன்வைத்துள்ளார். "எனது மனைவியின் நிறுவனம் ஒரு முறை சரக்கு பெறுவதற்கு ரூ.2.1 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை நடக்கும் போது அதிகாரிகள் 10 சதவீத ஆஃபர் கொடுத்தனர். என்று குற்றம்சாட்டினார். இந்த புகார்கள் கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளன.
வின்ட்ராக் இன்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை சென்னை சுங்கத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சுங்கத்துறை விதிகளின்படியே விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக எந்த லஞ்சமும் சுங்கத்துறை அதிகாரிகள் பெறவில்லை. விதிகளை மீறிவிட்டு பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. "குற்றச்சாட்டுகள் தவறான அறிவிப்பு மற்றும் தவறான வகைப்படுத்தலுடன் தொடர்புடையவை. சென்னை சுங்கத்துறை ஏற்கனவே பதிலளித்துள்ளது. அனைத்து உண்மைகளும் ஆராயப்பட்டு, சட்டத்தின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications