திமுகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. 39 தொகுதிகளில் நடந்த கதை.. தேமுதிகவால் திமுக கூட்டணிக்கு எவ்வளவு லாபம்?
சென்னை: தேமுதிக, இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளதன் மூலம் திமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலுமே சொல்லிக்கொள்ளும்படியான வாக்கு வங்கி வைத்துள்ள தேமுதிக, பல தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும், என்பதை உணர்ந்தே கூட்டணியில் தேமுதிகவை சேர்த்துள்ளது திமுக.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 39 தொகுதிகளில் 5,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் வென்றது திமுக. அதேபோல, குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே 17 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. தேமுதிகவின் வருகையால் இதுபோன்ற மிக சொற்ப எண்ணிக்கையிலான தோல்வியை தவிர்க்க முடியும் என திமுக கணக்கு போட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்
தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை பெறக்கூடிய ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அதேபோல, எதிர்க்கட்சிக்குச் செல்ல வாய்ப்புள்ள ஒவ்வொரு வாக்கையும் தடுப்பதும் முக்கியம். தமது கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டு, எதிர்க்கட்சிக்கு சென்றால், அந்தக் கட்சிக்கும் தமக்குமான வாக்கு வித்தியாசம் 2 ஆகிவிடும்.
அதனால் தான் தேர்தல் சமயத்தில் சிறு சிறு லெட்டர் பேடு கட்சிகளைக் கூட பொருட்படுத்தி ஆதரவை திரட்டி வருகின்றன அரசியல் கட்சிகள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கொமதேக என பல கட்சிகள் இருக்கும் நிலையிலும் அக்கட்சி தமது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒவ்வொரு கட்சியும்
கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் பகிர்வால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றாலுமே கூட, கூட்டணியில் ஒவ்வொரு கட்சியின் இணைவும் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பது அரசியலில் பாலபாடம். அதற்காகவே, திமுக, மெனக்கெட்டு கூட்டணிக்கு தேமுதிகவை இழுக்க முயற்சித்து வந்தது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி. ஒட்டுமொத்தமாக 8 வேட்பாளர்கள் வெறும் ஆயிரத்திகும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினர்.
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம்
மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களில் துரைமுருகனும் ஒருவர். குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றவர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் ஒருவர். ஒட்டுமொத்தமாக 8 வேட்பாளர்கள் வெறும் ஆயிரத்திகும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினர்.
5000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும், 39 வேட்பாளர்கள் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்து மனமுடைந்து போயினர். இந்த தொகுதிகள் தான் ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுத்தன என்று குறிப்பிட்டால் மிகையாகாது. அதாவது 39 தொகுதிகளில் வெற்றி தோல்விகள் ஆனது, வெறும் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
17 தொகுதிகளில் திமுகவுக்கு பறிபோன வாய்ப்பு
திமுக கூட்டணி 22 தொகுதிகளில் வெறும் 5 ஆயிரத்திஏகும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேநேரம், இந்த 5000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே 17 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்த குறுகிய வெற்றிடத்தை நிரப்பவே கூட்டணி கணக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் சில ஆயிரம் வாக்குகளும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதற்கான சாட்சியே 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள்.
தேமுதிகவால் பலம்
தேமுதிகவால் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் சுமார் 5,000 வாக்குகள் கிடைக்கும் என்றால் கூட, அந்தக் கட்சி எதிர்க்கட்சி கூட்டணிக்கு சென்றால் திமுகவுக்கும் அக்கட்சிக்குமான வாக்கு வித்தியாசம் 10,000 ஆகிவிடும். எனவே தேமுதிகவை இழுத்தால் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும், பல தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய முடியும் என்பது திமுகவின் கணக்காக உள்ளது.












Click it and Unblock the Notifications