ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்துவதா? அண்ணாமலைக்கு பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் கண்டனம்
சென்னை: சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேர்காணல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு அவர் அளித்த பதில் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. அண்ணாமலைக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா.பிரதீப்குமார், மாநில பொருளாளர் இரா. ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

"நேற்றைய தினம் 'நியூஸ் 18 தமிழ்நாடு' தொலைக்காட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்கள் நேர்காணல் நடத்தினார்.
அது சம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்களின் கேள்விகளை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை கொண்டும், மிகவும் தரம் தாழ்த்தி கூறியுள்ள சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற அநாகரிகமான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்த அண்ணாமலையின் செயலுக்கு "தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்" தமது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் கட்சிகள் ரீதியான மாற்றுப் போக்கும்..? நீங்கள் எதிர்பார்க்கும் கேள்விகளை மட்டும் தான் நெறியாளர்கள் கேட்க வேண்டும் என நினைப்பதும் எந்த வகையில் நியாயம் திரு.அண்ணாமலை அவர்களே.! இத்தனை கேள்விகள் கேட்டார் என பொறுமையாக பார்த்து கணக்கிட்டு சொல்லும் அண்ணாமலை பொறுமையிழந்து பதில்கள் கூறுவது ஏன்..?
'யாகவாரயினும் நாகாக்க' எனும் சொல்லுக்கு ஏற்ப ஒரு நல்ல வளர்ந்து வரும் தலைவர் தமது நாவை காக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்" என தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications