சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.! சர்ச்சைக்குள்ளான நிர்வாகத்தின் பதில்! நள்ளிரவில் பரபரப்பு
சென்னை: சென்னை ஐஐடி கல்லூரியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டிலேயே தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாகச் சென்னை ஐஐடி கல்லூரியும் கருதப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவிகள் தங்கி கல்வி பயில ஏதுவாக கல்லூரி விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி அடர்த்தியான மரங்கள் நிறைந்த ஒரு பகுதியாகும். இதனால் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கருதி வெளியாட்கள் நுழைவதைத் தடுக்க ஐஐடி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனப்படும் ஐஐடி சென்னை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளார். இது தொடர்பாக மாணவியின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி உள்ளனர்.

சிசிடிவி காட்சிகள்
குற்றவாளியைக் கண்டறியக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண் தனியாக சைக்கிலிங் சென்று கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த மாணவியிடம் அத்துமீற முயன்றுள்ளார். இரவு நேரம் என்பதால் சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது.

300 பேர்
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 300 பேரின் புகைப்படங்களைக் காட்டி கல்லூரி நிர்வாகம் விசாரித்து உள்ளது. ஐஐடியில் வேலை பார்க்கும் வடமாநிலத்தவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் அன்றைய தினம் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த 35 ஊழியர்களையும் அழைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது, இருந்த போதிலும், அந்த பெண் யாரையும் அடையாளம் காட்டவில்லை.

ஐஐடி நிர்வாகம்
ஐஐடி வளாகத்தில் மாணவ- மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு உள்ளதாக ஐ.ஐ.டி., நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர். கல்லூரியில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு பாதுகாவலர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் இரவு நேரங்களில் மாணவ- மாணவிகள் அழைக்கும்போது, காவலருடன் கூடிய வாகனம் அவர்களை பிக்அப் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக ஐஐடி தெரிவித்து உள்ளது.

சர்ச்சைக்குள்ளான பதில்
எனவே, மாணவர்கள் இரவு நேரங்களில் சிக்கல் ஏற்பட்டால் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அதேநேரம் சுமார் 600 ஏக்கர் பரப்பிலான இடத்தில் பாதுகாப்பு அளிப்பது என்பது சவாலான விஷயம் என்பதால் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது, buddy sytem என்ற அடிப்படையில் நண்பர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஐஐடி நிர்வாகத்தின் பதிலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கடமை
மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டியது ஐஐடி நிர்வாகத்தின் கடமை. அப்படியிருக்கும் போது, பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க மாணவர்கள் உடன் படிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என நிர்வாகம் எப்படிக் கூறலாம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், சென்னை போலீஸ் உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் இன்று நேரடியாக ஐஐடி-க்கு சென்று விசாரணை நடத்தினர். கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் புகார் அளிக்க மாணவி முன்வரவில்லை என கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications