1000 கோடி மோசடியின் மூளை.. தலைமறைவாக இருந்த சென்னை ஏஆர்டி நகைக்கடை உரிமையாளரின் தோழி கைது
சென்னை: சென்னை முகப்பேர் ஏஆர்டி நகைக்கடை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நகைக்கடை உரிமையாளரின் தோழியும், மோசடி திட்டங்களை வகுத்து கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவருமான லீமா ரோஸை போலீசார் கைது செய்தனர் .
சென்னை முகப்பேரில் ஏ.ஆர்.மால், ஏஆர்டி நகைக்கடை போன்ற நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனத்தில் வட்டியில்லா நகைக்கடன், முதலீட்டு தொகைக்கு அதிகவட்டி என பொதுமக்களிடம் ஆசை வார்த்தைக்கூறினார்கள்.

இந்த ஏஆர்டி நகைக்கடை ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. இதை உண்மை என்று நம்பிய மக்கள் போட்டி போட்டு பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு செய்தார்கள். ஆனால் இந்த ஜூவல்லரியின் உரிமையாளர்கள் மோசடியில் ஈடுபட்டனர்.
இவர்கள் முகவர்களை நியமித்து முதலீட்டை அதிகப்படுத்தி உள்ளனர்.50 லட்சம் முதலீடு செய்ய வைத்த முகவர்கள், ஒரு கோடி வரை முதலீடு செய்ய வைத்த முகவர்கள் பல முகவர்கள் தற்போது சிக்கலில் உள்ளனர். ஏஆர்டிக்காக மக்களிடம் ஆசை வார்ததை கூறி முதலீடு செய்ய வைத்த முகவர்களை போலீசார் தேடி தேடி கைது செய்து வருகிறார்கள்.
முன்னதாக ஏ.ஆர்.மால், ஏஆர்டி நகைக்கடை போன்ற நிறுவனங்கள் பெயரில் சுமார் 1000 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகி விட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் பணத்தை பறிகொடுத்த முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், நொளம்பூர் போலீசார் உரிமையாளர்களான ஆல்வின், ஆரோன் மற்றும் ஊழியர்கள் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஏஆர்டி ஜூவல்லரியின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகிய 2 பேர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்கள் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு பொதுமக்களை இந்த திட்டத்தில் சேர்த்துவிட்ட பிரியா, ஜவகர், தேவராஜ், ஆசிக் அலாவுதீன் உள்பட 8 முகவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த நிறுவனத்தில் பணி புரிந்து வந்த பிரியா என்ற பெண் 4 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். பின்பு தனது நண்பர்கள் மற்றும் உறவினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைச் சேர்த்து விட்டுள்ளார். பின்னர் வியாசர்பாடியில் தனியாகக் கிளை நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
பிரியா மட்டும் 60 இலட்சம் வரை முதலீடு தொகை வசூல் செய்து கொடுத்ததும், அதற்காக மாதம் 4 லட்சம் வரை கமிஷன் தொகைப்பெற்று அந்த பணத்தின் மூலமாக முகப்பேர் பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி வந்ததும் தெரியவந்தது. இவரை கடந்த ஆண்டு இறுதியில் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நகைக்கடை உரிமையாளரின் தோழியும், மோசடி திட்டங்களை வகுத்து கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவருமான லீமா ரோஸை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் நேற்று அதிரடியாக கைது செய்தனா்.












Click it and Unblock the Notifications