சென்னை நங்கநல்லூரில் பிரபல பெண் யூடியூபர் கொலை! கணவர் தூக்கிட்டு தற்கொலை! கலங்கிய மகன்!
சென்னை: சென்னை நங்கநல்லூரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் பெண் கொலை செய்யப்பட்டு அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் பிரபல யூடியூபர், பட்டுச் சேலை விற்பனை கடைகளை நடத்தி வந்தார்.
சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சுப்பிரமணி (51). இவரது மனைவி நாகலட்சுமி (41). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஹரீஷ் (21) ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார்.

இளைய மகன் சைலேஷ் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் சைலேஷ் காலை 6 மணிக்கு வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் சுப்பிரமணியும் நாகலட்சுமியும் இருந்தனர். கல்லூரி முடிந்து மாலை 3 மணிக்கு சைலேஷ் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறந்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சைலேஷ் உள்ளே சென்ற போது ஹால் முழுவதும் ரத்தக் கறை படிந்த கால் தடம் இருந்தது.
அச்சத்துடனேயே வலது புறம் உள்ள அறைக்குள் சென்ற போது அங்கு நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். பின்னர் தனது தந்தையை தேடி இன்னொரு அறைக்குச் சென்ற போது அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்தார்.
தாய், தந்தை இருவரது சடலங்களை பார்த்த மகன் சைலேஷ் கண்ணீருடன் ஆதம்பாக்கம் போலீஸாருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கிடையே கடன், நடத்தையில் சந்தேகம் எழுந்ததன் அடிப்பையில் அடிக்கடி சண்டை வருமாம். நாகலட்சுமி அதே பகுதியில் பட்டுப்புடவை விற்பனை கடையை நடத்தி வந்தாராம்.
இதனால் கொடுக்கல், வாங்கல் என்ற முறையில் நிறைய கடன் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் புடவை பிசினஸுக்காக நாகலட்சுமி யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வந்தாராம். அவரே புடவையை கட்டி காட்டும் வீடியோக்களை (முகம் சுளிக்க வைக்கும் வகையிலோ ஆபாசமாகவோ அல்ல) பதிவிடுவாராம்.
அதை பார்த்துவிட்டு புடவை குறித்து யாரேனும் போன் செய்தாலே சுப்பிரமணிக்கு சந்தேகம் எழுந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக இருவருக்குள்ளும் வாய்த் தகராறு இருந்து வந்ததாம். இதனால் சுப்பிரமணி, மனைவி, மகனை விட்டுவிட்டு மதுரையில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றுவிடுவாராம்.
கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் மதுரையில் இருந்து நங்கநல்லூருக்கு சுப்பிரமணி வந்தாராம். இந்த நிலையில் இருவருக்குள் என்ன நடந்தது என தெரியவில்லை. நாகலட்சுமியின் உடலில் தலையின் இடது புறம், கழுத்து இடது மணிக்கட்டு பகுதிகளிலும் முன்பக்க தொடைகளிலும் வெட்டுக் காயங்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கணவன் மனைவி சண்டையால் இப்படி அசம்பாவிதம் நடந்ததா, இல்லை வேறு யாராவது இந்த கொலைகளை செய்துவிட்டு கொலை, தற்கொலை போல் நாடகமாடிவிட்டுச் சென்றனரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ரஷ்யாவில் உள்ள மகன் இந்தியாவுக்கு திரும்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications