“உங்க தம்பியால் கிடைச்ச பணம் ரூ. 5,000.. சந்தோஷமா வாங்கிக்கோங்க”.. விஜய் சொல்றத பாருங்க!
சென்னை: “எனது அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்த உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக் கொள்ளுங்கள்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் சூழலில் இன்று மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக விஜய் விமர்சித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.

5000 ரூபாய் - விஜய் ரியாக்ஷன்
இந்த அறிவிப்புக்கு திமுக கூட்டணி சார்பில் பாராட்டுகளும், எதிர்க்கட்சித் தரப்பில் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரின் அறிவிப்பை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13 ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?
விசில் சத்தம் தான் காரணம்
இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம் தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.
இப்போது கூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.
சந்தோசமா வாங்கிக்கோங்க
அதுமட்டுமா? தி.மு.க தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.கவைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜய்யின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
திகில் ஊட்டும் விசில்
நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பெண்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஒரே நாளில் திடீரென ரூபாய் 5000 வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில், அது தன்னால் தான் என தவெக தலைவர் விஜய் கூறி இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications