முதல்வரிடம் தங்க செயின் தந்த சௌமியாவிற்கு.. பறந்த அப்பாயின்மென்ட் ஆர்டர்.. செந்தில் பாலாஜி சர்ப்ரைஸ்
திருச்சி: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் 2 பவுன் தங்க சங்கிலியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பிரபல தனியார் வேலைக்கான ஆணையை இன்று வழங்கினார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை மேட்டூர் அணையை திறப்பதற்காக சென்று இருந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் மனு ஒன்றை அளித்த திருச்சியை சேர்ந்த சௌமியா என்ற பெண் தனது மனுவோடு கொரோனா நிவாரண நிதிக்காக தனது 2 பவுன் தங்க சங்கிலியை நிவாரணமாக கொடுத்து இருந்தார்.
இந்த மனுவில் தனது குடும்ப கஷ்டம் குறித்து உருக்கமாக குறிப்பிட்டு, என்னிடம் பணம் இல்லை, இந்த நகை இருக்கிறது, வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனக்கு வேலை கிடைக்க உதவி செய்யுமாறு உருக்கமாக கேட்டு இருந்தார்.

உருக்கம்
மிகவும் உருக்கமான கடிதத்தில் சௌமியா, நான் ஒரு கம்ப்யூட்டர் சைன்ஸ் பிஇ பட்டதாரி, என்ன அப்பா ஆவின் ஓய்வு பெற்ற ஊழியர். என்னுடைய அக்கா 2 மற்றும் நான் என்று எல்லோரையும் அவர்தான் படிக்க வைத்தார். அக்கா 2 பேரின் திருமணத்திற்காக என் அப்பா செலவு செய்தார். அம்மாவின் நிமினியா காய்ச்சல் மருத்துவ சிகிச்சைக்காக அப்பாவின் சேமிப்பு பணம் எல்லாம் செலவாகிவிட்டது. அம்மாவும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

செலவு
நாங்கள் வறுமையில் இருக்கிறோம். எனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்தால் நன்றியோடு இருப்பேன். எனக்கு அரசுவேலைதான் வேண்டும் என்று இல்லை, எங்கள் ஊருக்கு அருகிலேயே தனியாரில் வேலை வாங்கி கொடுத்தாலும் நன்றியோடு இருப்பேன். என்னிடம் பணம் இல்லை, என்னிடம் இருக்கும் 2 பவுன் தங்க சங்கிலியை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்து உள்ளேன், என்று அந்த பெண் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

வேலை
இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய 2 பவுன் செயின் வழங்கி, உருக்கமான கடிதம் எழுதிய சௌமியாவிற்கு தனியார் வேலைக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இந்த கடிதம் பெரிய அளவில் வைரலான நிலையில், செந்தில்பாலாஜி அந்த பெண்ணை நேரில் சந்தித்து பணியாணை வழங்கி உள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள ஜே.எஸ்.டபுள்யு (தனியார்) நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு மாதம் 17,000 ரூபாய் சம்பளம்.

முதல்வர் டிவிட்
முன்னதாக இந்த புகைப்படத்தை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டில், மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று குறிப்பிட்டு இருந்தார்.. தற்போது அவர் கூறியது போலவே சௌமியாவிற்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications