சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொழிலாளி பலி.. நாளை உலக கோப்பை போட்டி நடக்கும் நிலையில் சோகம்!
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி முருகன் ( வயது 52) என்பவர் 14 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தவறி விழுந்து சுயநினைவின்றிக் கிடந்த முருகன், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், வெல்டிங் மேற்பார்வையாளர் மகேந்திர பாபுவை கைது செய்து போலீசார் விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 14 அடி உயரத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடும் இன்றி பணி செய்ய வைக்கப்பட்டாரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்தியா - ஆஸி. இடையேயான ஆட்டம் நடைபெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications