திமுக போராட்டம் எதிரொலி.. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படாது: அமைச்சர் அறிவிப்பு
சென்னை: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம் பில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இந்திமொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்து ஆறு லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
இந்த ஒரு வருட பயிற்சியை சென்னையில் இயங்கி வரும் இந்தி பிரச்சார சபா மூலமாக நடத்தப்பட்டு அவர்களாலேயே சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் சென்னை மத்திய கைலாஷில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம். எழிலரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இணை செயலாளர் பூவை ஜெரால்டு, துணை செயலாளர்கள் கவி கணேசன், மண்ணை தாஸ், சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அமைப்பாளர்கள் கொட்டிவாக்கம் அருண், சோம சுந்தர மூர்த்தி, டிசீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக சென்று தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
எனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும்.. எரிக்க எதுவும் இல்லை.. உன்னவ் பெண்ணின் சகோதரன்
இந்த நிலையில்தான், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று அளித்துள்ள பேட்டியில், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படும் முடிவு கைவிடப்பட்டது. திமுகவுக்கு அரசியல் செய்ய இடமளிக்க வேண்டாம். ஹிந்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தெலுங்கு மொழி கற்பிக்க ஒதுக்கப்படும். தமிழ் தவிர்த்த பிற மொழிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை என்பதால்தான் முன்பு ஹிந்தியை தேர்ந்தெடுத்தோம். இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.