சென்னை முகப்பேர் ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடை நல்லி எலும்பில் புழுக்கள்! குழந்தைகளுக்கு வாந்தி!
சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையில் நல்லி எலும்பில் புழுக்கள் இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை முகப்பேர் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு எதிரே ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்ற அசைவ உணவகம் உள்ளது. இந்த கிளை தொடங்கி கடந்த 5 அல்லது 6 மாதங்கள் இருக்கும். இந்த கடைக்கு சென்னையில் சில இடங்களில் கிளைகள் உள்ளன.

இந்த நிலையில் முகப்பேரில் உள்ள கிளையில் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவர் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது நல்லி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அதில் குழந்தைகளால் எலும்பை கடிக்க முடியாது என்பதால் குணா கடித்துள்ளார்.
அப்போது அந்த மட்டன் துண்டில் புழுக்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணா, ஹோட்டல் மேலாளரிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக வீடியோவையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் "நான் என் மனைவி இரு குழந்தைகளுடன் முகப்பேரில் உள்ள ஸ்டார் பிரியாணி கடைக்கு வந்தோம்.
மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தோம். அதிலிருந்த நல்லியில் புழுக்கள் இருக்கின்றன, என் குழந்தைகளுக்கு எலும்பை கடிக்க தெரியாது என்பதால் நான் பிரித்துக் கொடுத்த போது இந்த புழுக்களை பார்த்தேன். இந்த குழந்தையை இத்தனை நேரம் கொஞ்சி கொண்டிருந்தீர்களே, அந்த குழந்தைக்கு இதை சாப்பிட கொடுக்கட்டுமா சார்?
பதில் சொல்லுங்கள், உங்கள் குழந்தைக்கு இந்த புழுக்கள் நிறைய உணவை கொடுப்பீர்களா, இது எவ்வளவு பெரிய விஷம்! என ஒவ்வொன்றாக குணா கேட்க கேட்க, மேலாளர் தலை குனிந்தபடி இருக்கிறார். இதையடுத்து குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு குணா அழைத்து சென்றுள்ளார்.
இந்த ஹோட்டலில் ஏற்கெனவே சிக்கன் 65 சாப்பிட்ட போது அதில் சில துண்டுகள் வேகாமல் இருந்ததும் இது குறித்து மேலாளரிடம் கேட்ட போது ஒன்றுமே தெரியாமல் இருந்து பிறகு அந்த சிக்கன் 65 க்கு மட்டும் பில் செலுத்த மாட்டோம் என தங்களுக்கு தெரிந்தவர்கள் கூறியதாக அங்கிருந்த வாடிக்கையாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து குணா செய்தியாளர்களிடம் கூறுகையில் என் பெயர் குணா, முகப்பேர் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையில் நல்லி பிரியாணி நன்றாக இருக்கும் என்பதால் நான்தான் என் குடும்பத்தினரை நேற்று இரவு அழைத்து வந்தேன். அப்போது என் குழந்தைக்கு நல்லியை கடிக்கத் தெரியாது என்பதால் நான்தான் அதை கடித்தேன்.
அப்போதுதான் அதில் வெள்ளை நிறத்தில் புழுக்கள் இருந்தன. இதுகுறித்து மேனேஜரிடம் கேட்ட போது முழிக்கிறார், எங்கள் புகாருக்கு எந்த பதிலையும் சொல்லாமல் எங்களை காக்க வைத்தபடியே இருந்தனர். கடைசியில் போலீஸுக்கு போன் செய்து என்னை குற்றவாளி போல் காட்டினர். ஆனால் போலீஸார் இதை நம்பவில்லை.
முதலில் குழந்தையை போய் பாருங்கள் என்றார்கள். குழந்தைகளுக்கு வாந்தி என்பதால் என் மனைவி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர்களும் வருவதாக தெரிவித்திருந்தனர். இவ்வாறு குணா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு உணவகங்களிலும் ஒவ்வொரு பொருளுக்கும் அதிக அளவில் காசை வசூலித்துவிட்டு இப்படி தரமில்லாத உணவை அளிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் இதற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications