மாரி செல்வராஜின் வாழை ஒரு ஆபாச படம்.. எழுத்தாளர் சாரு நிவேதிதா கடும் விமர்சனம்
சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வாழை திரைப்படம் தற்போதும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அந்த படம் ஒரு ஆபாச படம் எனவும், அந்தப் படத்தில் காட்டப்படும் பூங்கொடி டீச்சர் - சிவனைந்தன் இடையே முறையற்ற உறவு இருந்திருக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்து இருக்கிறார் எழுத்தாளரான சாரு நிவேதிதா.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழை படம் வெளியானது. வாழை தோப்பு பணியாளர்களின் வேதனையை ரத்தமும் சதையுமாக திரையில் அப்படியே கொண்டு வந்திருந்தார் மாரி செல்வராஜ்.

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நடிகர்கள் கலையரசன். நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படம் வெளியான நிலையில் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து வாழை படத்தை பார்த்து விட்டு தமிழகத்தின் பிரபல இயக்குனர்களும், நடிகர்களும், அரசியல் தலைவர்களும் புகழ்ந்து வருகின்றனர். மேலும் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வெளியாகியுள்ள போதும் பட தியேட்டர்களில் வாழை படம் ஹவுஸ்புல்லாக ஓடி வருவதாக மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாழை ஒரு ஆபாச படம் என விமர்சித்துள்ளார் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா. இதுதொடர்பாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்."தாய்லாந்திலும் மற்ற செக்ஸ் டூரிஸ தேசங்களிலும் லைவ் ஷோ என்ற பிரபலமான காட்சி உண்டு. ஒரு பெரிய அறையின் நடுவே வட்ட வடிவத்தில் ஒரு மேடை இருக்கும். அதில் கண்ணைக் கூசும் வெளிச்சத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உடலில் எந்த வஸ்திரமும் இன்றி உடலுறவு கொள்வார்கள். அறையைச் சுற்றி அமர்ந்திருக்கும் ஆண்களும் பெண்களும் அந்தக் காட்சியைக் கண்டு களிப்பார்கள். கூட்டத்தில் ஆண்களுக்கு நிகராகவே பெண்களும் இருப்பார்கள்.
வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள் அனைத்தும் தாய்லாந்தின் லைவ் ஷோ காட்சிகளின் soft version ஆகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நேரடியாக நடக்கும். இங்கே மறைமுகமாக நடக்கிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதான பாசாங்குதான் இந்தப் படத்தை சமூக விரோதமான படைப்பாக மாற்றுகிறது.
ஏன் சமூக விரோதம் என்றால் பட்த்தில் காண்பிக்கப்படுவது பச்சைப் பொய். சிவனைந்தன் எட்டாம் வகுப்பு மாணவன். வயது பதின்மூன்று. டீச்சர் பூங்கொடிக்கு வயது இருபத்து இரண்டு இருக்கலாம். பூங்கொடி ஒரு காட்சியில் பாவாடை தாவணியோடு வருகிறார்.
டீச்சரும் சிவனைந்தனும் வரும் காட்சிகள் அனைத்திலுமே பாலியல் சமிக்ஞைகள் படு தீவிரமாக உணர்த்தப்படுகின்றன. என்னைப் போல் அது புரியாத அசடுகளுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெள்ளத் தெளிவாக தன் இசையின் மூலம் அந்தப் பாலியல் சமிக்ஞைகளைப் புரிய வைத்து விடுகிறார். இயக்குனர் சூசகமாகச் சொல்ல நினைப்பதை இசையமைப்பாளர் நம் கண் முன்னே தூலமாக எடுத்துக் காண்பித்து விடுகிறார். நம் செவிகள் கேட்பதை கண்கள் புரிந்து கொள்கின்றன.
இன்னொரு விஷயம், இரண்டு திரவங்கள் குறித்து. விந்து, கண்ணீர். பார்வையாளர்களிடம் இரண்டையும் வரவழைத்து வெற்றி அடைந்து விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். மரணமும் செக்ஸும் ஒன்றுதான் என்கிறார் ஃப்ரெஞ்ச் தத்துவவாதி ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille). தூக்கு மாட்டிச் சாகும்போது விந்து வெளிவரும். செக்ஸின் போது மரணத்தைப் போலவே நம்மை மறக்கிறோம்.
ஆனால் வாழை படத்தில் பூங்கொடி டீச்சர் கதைக்கும், வாழைத்தோட்டத் தொழிலாளர்கள் கதைக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு ரூபாய் கூலி உயர்வு கேட்டார்கள், முதலாளியின் சுரண்டல் குணத்தால் இருபது தொழிலாளர்கள் செத்தார்கள் என்ற கண்ணீர்க் கதையை மட்டும் சொன்னால் மக்களிடையே எடுபடாது என்பதால்தான் இயக்குனர் டீச்சரின் soft porn கதையையும் இடையில் சேர்த்திருக்கிறார். அதிலும் படு பாசாங்காக. " என விமர்சித்துள்ளார். அதே நேரத்தில் சாரு நிவேதிதாவை பலரும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications