ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிறதா? அதிமுகவை கைக்குள் கொண்டு வந்த எடப்பாடி.. பிளாஷ்பேக்
சென்னை: நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பிடித்துவிட்டார். இதன் மூலம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரே அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். அவர் இறந்ததும் அந்த பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவுக்கு கொடுத்தார்கள். இதையடுத்து ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இரு அணிகளாக செயல்பட்டு வந்த நிலையில், சசிகலா, தினகரன் சாவகாசத்தை விட்டால்தான் ஒன்றிணைவேன் என ஓபிஎஸ் கண்டிஷன் போட்டார்.

இதையடுத்து இரு அணிகளும் ஒன்றிணைந்தன. பின்னர் நடந்த பொதுக் குழுவில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்றும் இனி இந்த கட்சியில் பொதுச் செயலாளர் பதவியே இல்லை என்றும் கூறி சசிகலாவுக்கு கொடுத்த பதவியை நீக்கினார்கள். அந்த பதவிக்கு இணையான இரு பதவிகளை உருவாக்கினார்கள்.
அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர். முதல் பதவி ஓபிஎஸ் வசமும் இரண்டாவது பதவி எடப்பாடி பழனிசாமியிடமும் இருந்து வந்தது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ஆனால் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் வென்றார். தென் தமிழகத்தில் செல்வாக்கு இருப்பதாக கூறி ஓபிஎஸ் தனது மகனை வெற்றி பெற வைக்கவே உழைத்தார் என அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
இதையடுத்து திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய பராசக்தி வசனத்தை தனது தந்தை மனப்பாடம் செய்ய சொன்னார் என்றும் அந்த வசனத்தை மனப்பாடம் செய்ய இரவு தூங்கும் போதெல்லாம் தலைமாட்டில் வைத்து தூங்கியதாகவும் ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார்.
இங்கிருந்துதான் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என்ற பேச்சு துளிர்விட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொதுக் குழுவை கூட்டி ஒற்றை தலைமையாக எடப்பாடியை தேர்வு செய்ய அவருடைய ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். இதை அறிந்த ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றார். பின்னர் நீதிமன்றத்தில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் கையெழுத்திட்ட தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றத்தின் உத்தரவின் போரில் ஜூன் 14 ஆம் தேதி பொதுக் குழு நடத்தப்பட்டது.
இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி (2022) பொதுக் கூட்டம் நடத்தப்படும் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகள் நடந்தும் ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவே தீர்ப்பு கிடைத்தது. பின்னர் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்தில் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்குவதாகவும் அவருடைய பொருளாளர் பதவியை நீக்குவதாகவும் பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோர்ட்டில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் தனித்தனி அணிகளாக செயல்பட்டனர். இந்த நிலையில் ஜூலை 14 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என்றும் அன்றைய தினம் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகளும் புஸ்வாணமாகின. பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்றும் குறிப்பிட்டு தேர்தல் ஆணைய ரெக்கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள அனுப்பப்பட்ட நிலையில் அங்கீகாரமும் கிடைத்தது.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதிமுக தொடங்கப்பட்டு 51 ஆண்டுகளையொட்டி மதுரையில் அதிமுக மாநாடு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை சாக்குவைத்து அதிமுக லெட்டர் பேடு, கொடி, சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தி வந்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு போட்டது. இதில் ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடை பயன்படுத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் எடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து தோல்வி வந்து கொண்டே இருப்பதால் அவருடைய அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications