ஆமாம்.. பிரச்சினை பண்ணுவேன்? ! நான் ரெட்டியா? சங்கியா? ஆதவ் மீண்டும் சர்ச்சை
சென்னை:ஊடக விவாதங்களில் தன்னை சிலர் சாதியைக் குறிப்பிட்டுப் பேசி வருவதாகவும், ஆனால் தான் என்ன சாதி என்பதே தெரியாமல்தான் நான் திருமாவளவனுடன் இணைந்துள்ளேன் என்று ஆதவ் அர்ஜுனா ஒரு திருமணவிழாவில் பேசும் போது தெரிவித்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஒரு சில மாதங்கள் முன்பாக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு எனப் பேசிய விவகாரம் கூட்டணிக்குள் ஒரு குழப்பத்தை உண்டாக்கியது. அவரது கருத்தை திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா கண்டித்திருந்தார். அதேபோல் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், 'அரசியல் முதிர்ச்சியற்ற கருத்து'என்று கூறி இருந்தார். குறிப்பாக விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜுன் கருத்தை ஏற்கவில்லை.

இதைப் பற்றி கருத்து தெரிவித்த திருமாவளவன், அவரிடம் உரிய விளக்கம் கேட்போம் என்று கூறி இருந்தார். பின்னர் கட்சி மேல்மட்ட நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார். இறுதியில் ஆதவ் அர்ஜுனா, தனிப்பட்ட வகையில் பேசிய பேச்சுக்காக வருத்தம் தெரிவித்துவிட்டார் என்று சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஆதவ் அர்ஜுனா முன்வைத்த அதிகாரத்தில் பகிர்வு என்ற புள்ளியைத் தொட்டு தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசியதால் மீண்டும் அந்த விவகாரம் தலைதூக்கியது. அதற்கு உரிய விளக்கத்தை அளித்தார் திருமாவளவன். இறுதியில்., 'திமுக கூட்டணி நாங்கள் உருவாக்கியது. அதைவிட்டு வெளியேற என்ன தேவை இருக்கிறது? தேவை இல்லாமல் ஊடகங்கள் கூட்டணியை உடைக்க முயல்கின்றன' என்று பேசி இருந்தார்.
இப்போது ஒரு திருமணவிழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'பிரச்சினை வரும் என்றுதான் நாங்கள் காத்திருக்கிறோம்' என்று ஒரு புள்ளி வைத்து புதிய கோலத்தைப் போட்டுள்ளார். ஆதர் அர்ஜுனா தனது உரையில், "தமிழக அரசியலில் 29 வயதில் கட்சி ஆரம்பித்த ஒரே தலைவர் திருமாவளவன் தான். இந்த உண்மை எத்தனை பேருக்குத் தெரியும் எனத் தெரியவில்லை.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகால அரசியல் பயணத்தில் அவர் இருந்து வருகிறார். சுயமரியாதை உணர்வை திருமண விழாக்கள் மூலமாகத்தான் பெரியார் ஏற்படுத்தினார். அதன்பின் அண்ணாதுரை சுயமரியாதை திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் அளித்தார். இன்றைக்கு ஆவணக் கொலைக்கு எதிராக ஒரு சட்டத்தை உண்டாக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.
ஆகவேதான் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்று போராடுகிறோம். அந்த அதிகாரம் எதற்கு? ஊழல் செய்யவா? பதவியை அனுபவிக்கவா? இல்லை. 1000 ஆண்டுகளாக நாம் சமமாக நடத்தப்படவில்லை. நமக்கான உரிமை மறுக்கப்படுகிறது. 25% நிலப்பரப்பில் தலித் மக்கள் தமிழ்நாட்டில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நில உரிமை உள்ளதா? அவர்களின் பஞ்சமி நிலங்கள் எங்கே சென்றன? அதைப் பற்றி தமிழக அரசு அறிக்கையை வெளியிட வேண்டும்?
நிலத்தை வைத்துத்தான் தலித் மக்கள் உரிமை பறிக்கப்பட்டது. அதே நிலத்தைக் கொண்டு அவர்களின் உரிமை மீட்கப்பட வேண்டும். தமிழக அரசு அதற்காகப் போட்ட கமிட்டியின் முடிவுகளை வெளியிட முன்வர வேண்டும். உரிய மக்களுக்கு அந்த 10 லட்சம் ஏக்கர் நிலங்களைப் பிரித்துத் தரவேண்டும்.
நான் திருமாவளவனுடன் சிதம்பரம் தொகுதிக்குச் சுற்றுப் பணம் செய்தபோது தலித் மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றேன். மனிதர்கள் வாழும் இடமா இது என வேதனை எழுந்தது? ஆப்பிரிக்காவைவிட மோசமான நிலையில் மக்கள் வாழ்கிறார்கள். அதுதான் உண்மை. 80% மக்கள் குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதை எதிர்த்து குரல் கொடுத்தால் சங்கி என்கிறார்கள்.
தமிழக அரசு எத்தனை சேரிகளை ஒழித்துள்ளது? எவ்வளவு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன? என்பதற்கான புள்ளிவிவரத்தைத் தரவேண்டும். இதைக் கேட்டால் என்னை விமர்சிப்பார்கள் என்பது முன்பே நான் அறிவேன். சிலர் விவாதங்களில் என் சாதிப் பெயரைச் சொல்லி விமர்சிக்கிறார்கள். எனக்கே என் சாதி என்னவென்று தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் கட்சியில் இருக்கிறேன்.
ஒரு எம்.எல்.ஏவாகவோ அல்லது எம்பியாகவோ உருவாக வேண்டி இங்கே நான் வரவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்கும் குரல் கொடுக்கத்தான் வந்திருக்கிறேன். இங்கே பிரச்சினை வந்தால் நாங்கள் உடன் இருப்போம் என்று நிர்வாகிகள் சொன்னார்கள். நான் பிரச்சினை வர வேண்டும் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறேன். பிரச்சினை வந்தால்தான் தீர்வு கிடைக்கும். இதுவரை அமைதியாக, பொறுமையாக இருந்தது போதும்.
இது கொள்கை கூட்டணி என்கிறார்கள். அப்படி எனில் எங்களுக்கும் அதிகாரத்தைக் கொடுங்கள். ஒருவர் மட்டும் ஆள்வதற்குப் பிறக்கவில்லை. தேர்தலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்றார்கள். இன்றைக்குக் கடந்த 6 மாதங்களாக விசிகதான் ஊடகங்களில் முதன்மை செய்தியாக இருக்கிறது. எங்களுக்கும் பிரச்சார வியூகத்தை அமைக்கத் தெரியும். எங்கள் எல்லா தேவைகளும் சட்டமன்றத் தேர்தல் போது நிறைவேற்றப்படும்" என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications