அமைச்சர் பிடிஆர் எங்கே யார்கிட்ட பேசினாருன்னு சொல்லணுமா.. ஒரிஜினல் ஆடியோவே இருக்கு.. அண்ணாமலை பரபர!
சென்னை : "அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோவில் பேசியிருப்பது ஒப்புதல் வாக்குமூலம். அதை இல்லை என்று வழக்கு போடத் தயாராக இருந்தால் தைரியமாகப் போடுங்கள். ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது என்பதையும் அவர்கள் எங்கு சொல்கிறார்களோ அங்கு கொடுக்க தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
சர்ச்சை ஆடியோ : முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது முன்னோர்கள் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட இந்த ஒரு வருடத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் அதிக பணம் சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது ஆடியோவும் வெளியானது.

சர்ச்சைக்குரிய ஆடியோ பற்றி தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். "சமூக வலைதளங்களில் நான் பேசியதாக பரவும் ஆடியோ கிளிப் போலியாக ஜோடிக்கப்பட்டது. பொதுத்தளங்களில் கிடைக்கும் தொழில்நுட்பங்கள், அந்த ஆடியோ க்ளிப் நம்பகத்தன்மை கொண்டது அல்ல என்று தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. தற்போதைய தொழில்நுட்பங்கள் மூலம் இதுபோன்ற ஆடியோ, வீடியோ இனிவரும் காலங்களில் அதிகம் வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை" என்று தெரிவித்தார்.
அமைச்சர் விளக்கம் : ஆனால் இந்த விவகாரத்தை சீரியஸாக கையிலெடுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது சார்பாக ஒரு குழுவை அனுப்பி ஆளுநரிடம் புகார் மனு அளித்தார். அதேபோல் பிடிஆர் விளக்கத்தையும் விமர்சித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாக கூறும் அமைச்சர் அது உண்மை என்றால், நான் பேசுகிற மாதிரி ஆடியோக்களை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இரண்டாவது ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து வீடியோ வாயிலாக விளக்கம் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியையும் எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை. இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன்வவில்லை. பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார்." என விமர்சித்தார்.

ஒரிஜினல் ஆடியோவை கொடுக்க ரெடி : இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "பி.டி.ஆர் இதில் பேசியிருப்பது ஒப்புதல் வாக்குமூலம். இதில் பி.டி.ஆர் குற்றவாளி இல்லை. என்ன நடக்கிறது என்பதை தெரிவித்துள்ளார். அதை இல்லை என்று வழக்கு போடத் தயாராக இருந்தால் தைரியமாகப் போடுங்கள். தாராளமாக வழக்கு போடலாம். ஒரிஜினல் ஆடியோவை அவர்கள் எங்கு சொல்கிறார்களோ அங்கு வெளியிடத் தயாராக இருக்கிறேன்.
எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். நாங்கள் ஒன்றும் அவர் பேசுவதை ஒட்டுக் கேட்கவில்லை. பப்ளிக் இன்ட்ரஸ்டில் இந்தியாவில் இதை வெளியிடலாம் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. அதை தி.மு.கவின் சில முக்கியப் புள்ளிகள் படிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார் அண்ணாமலை.
கனிமொழி நோட்டீஸ் பற்றி அண்ணாமலை : மேலும் திமுக எம்.பி கனிமொழி தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறித்துப் பேசிய அண்ணாமலை, "கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு இருந்த பங்குகளை விற்றுவிட்டேன் என்ற ஒரு தேதியிட்டு கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களே பங்குதாரர் என ஒப்புக்கொண்டார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு பங்குகளை விற்றிருக்கிறேன் என்கிறார்.
விற்றிருந்தாலும் அந்தப் பணம் எங்க போச்சு? அனாதை ஆசிரமத்துக்கு தானமாக கொடுத்தார்களா, நாலு பேருக்கு சாப்பாடு போட்டார்களா... யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் இதுவரை கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு பங்கு இல்லை என்று கூறவில்லை. நம்முடைய குற்றச்சாட்டு அவர்களுடைய சொத்து மதிப்புதான்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications