சூரியனையும் சக்தியையும் பிரிக்க முடியாது.. நான் அரசியல் பேசல -அண்ணா பல்கலையில் முதல்வர் பேசியது என்ன
சென்னை: சூரியனையும் சக்தியையும் பிரிக்க முடியாது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஆளில்லா வான்வழி வாகன கழகம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக சூரிய சக்தி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா பல்கலையின் ஏரோனாட்டிகல் பிரிவு மூலம் உருவாக்கப்பட்ட டிரோன்களை வைத்து இந்த ஆளில்லா வான்வழி வாகன கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மூலம் ரூ. 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த வான்வழி வாகன கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் போலீஸ் பாதுகாப்பு, மருத்துவம், வேளாண் துறைக்கு இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஆளில்லா டிரோன் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிறிய ரக டிரோன்கள், நீண்ட தூர கண்காணிப்பு டிரோன்கள், பாதுகாப்பு டிரோன்கள், வானிலை சோதனை டிரோன்கள் போன்ற பல டிரோன்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கல்வியில் சிறந்த மாநிலம்
கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பட்டம் மட்டும் நமக்கு போதாது. உயர்கல்வியில், ஆராய்ச்சியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் பெருமளவிற்கு உழைக்க வேண்டும். உயர் கல்வி துறையில் கருணை அடிப்படையில் 36 வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது கிடையாது, கல்வித்தகுதி அடிப்படையில் வழங்கப்பட்ட பணி. ஆளில்லா வான்வழி வாகன கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக சூரிய சக்தி மையத்தை நான் இப்போது தொடங்கி வைத்து இருக்கிறேன்.

சூரிய சக்தி மையம்
இங்கேயும் நான் சூரிய சக்தி மையத்தைதான் தொடங்கி வைத்து இருக்கிறேன். சூரியன் என்று சொன்னாலே அது சக்திதான். சூரியன் என்ற சொல்லையும், சக்தி என்ற சொல்லையும் யாராலும் பிரிக்க முடியாது. நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். அது எனக்கு இப்பத்து தேவையும் இல்லை. நான் சூரிய சக்தி மின்சாரம் பற்றி பேசுகிறேன். கிராமப்புற மின் மயமாக்க நிறுவனத்தின் நிதி உதவியோடு 7.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சூரிய சக்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

மின்சார தேவை அதிகம்
மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற முன்னெடுப்புகள் அவசியம் ஆகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்ய சூரியசக்தி பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை செய்வது சந்தோசம் அளிக்கிறது. இங்கு ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் அமைக்க உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் நன்றி. இவர்கள் உருவாக்கி இருக்கும் டிரோன்கள் வியப்பு அளிக்கிறது.

டிரோன் அவசியம்
இந்த டிரோன்களை உருவாக்கிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் பட்டம் மட்டும் வழங்கும் பல்கலைக்கழகமாக இருக்க கூடாது. கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, புதுமையான படிப்புகள் கற்க மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை ஆலோசனை வழங்க வேண்டும், தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க சக்தியான இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.

கண்டுபிடிப்புகள்
நீங்கள் ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். தமிழ்நாட்டை நீங்கள் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்டவை தமிழ் நாட்டில்தான் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தமிழர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உயர் கல்விதான் இதற்கு காரணம், என்று முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications