தவறான ஊசி போட்டதால் இளம்பெண் மரணம்.. உறவினர்கள் போராட்டம்.. சென்னையில்!
Recommended Video
சென்னை: சென்னையில் தவறான ஊசி செலுத்தியதால், 23 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அடுத்த தண்டலம் தரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நித்யா. 23 வயது பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார்.
இந்நிலையில், நித்யாவிற்கு இருமல் அதிகமாகி, திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் அவரை அனகாபுத்தூரில் உள்ள ஜெயம் என்ற தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றனர். டாக்டர் சுஜாதா கருணாகரன் என்பவர் நித்யாவை பரிசோதித்து ஊசி போட்டதாக சொல்லப்படுகிறது.

அலட்சியம்
ஆனால், ஊசி போட்ட சில நிமிடத்தில் நித்யா ஆஸ்பத்திரியிலேயே மயங்கி கீழே விழுந்தார்... இதை பார்த்த அங்கிருந்த டாக்டர், நித்யாவை வேறொரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி சொல்லி உள்ளனர். பதறி போன பெற்றோரும் நித்யாவை வேறொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் அங்கும் சிகிச்சை தராமல், வேறொரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி அலட்சியமாக சொல்லி உள்ளனர்.

உயிரிழப்பு
பின்னர், பெற்றோரும், நித்யாவை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு நித்யாவை பரிசோதித்த டாக்டர்கள் உயிர் பிரிந்து அரை மணி நேரமாகி விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். டாக்டர்களின் அலட்சியத்தால்தான் மகள் இறந்துவிட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், குன்றத்தூர் போலீஸ் ஸ்டேஷனிலும் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து புகார் தந்தனர்.

ஏற்கவில்லை
ஆனால், இச்சம்பவம் சங்கர் நகர் காவல்துறைக்கு உட்பட்ட அனகாபுத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் நடந்ததால், சங்கர்நகர் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர். பின்னர் சங்கர்நகர் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். ஆனால் சங்கர்நகர் போலீசாரும் புகாரை ஏற்கவில்லை.

போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் நித்யாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தந்தனர். இதற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications