சென்னை உதயம் தியேட்டர் அருகே.. மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி! ஷாக் சம்பவம்
சென்னை: சென்னை அசோக்நகர் அருகே மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பள்ளத்தில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்திருந்ததால் துர்நாற்றத்தில் மூச்சடைத்து இளைஞர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை அசோக்நகர் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. 3 மாதங்களுக்கு முன்பே இந்த பள்ளங்கள் தோண்டப்பட்டதாகவும், ஆனால் பணிகள் வேகமாக நடக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்குள்ள பள்ளங்கள் இருப்பது தெரியாமல் அவ்வப்போது சாலை விபத்துக்களும் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீப நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. கழிவுநீரும் இந்த பள்ளத்தில் சேர்ந்தது. இதனால் அந்த பள்ளம் கடும் துர்நாற்றத்துடன் இருந்துள்ளது.
இந்த நிலையில் இந்த பள்ளத்திற்கு அருகே நாய்க்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். சென்னை உதயம் தியேட்டர் அருகே உள்ள இந்த பள்ளத்தில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்திருந்ததால் துர்நாற்றத்தில் மூச்சடைத்து இளைஞர் இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளத்திற்குள் விழுந்தவர் சென்னை அம்பேத்கர் நகரை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது.
இளைஞர் ஐயப்பனின் உயிரை காவு வாங்கிய அந்த பள்ளத்தை சுற்றி எந்தவித பாதுகாப்பு தடுப்புகளும், எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் 3 மாதங்களுக்கு மேலாக மெத்தனமாக இந்த பணிகள் நடப்பதாகவும், பாதுகாப்பு இல்லாமல் தான் பணிகள் நடந்து வருகிறது என்றும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் உயிரிழந்த ஐயப்பன் அப்போது மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications