கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான இளைஞர் பாஜக நிர்வாகியா? மறுப்பு தெரிவித்து ரங்கநாயகுலு விளக்கம்!
கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய இளைஞர், பாஜகவில் பொறுப்பில் இல்லை என பாஜக விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் குமார் என்பவர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று பாஜக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் ரங்கநாயகுலு விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் குமார் என்ற இளைஞர் பாஜக ஊடகப் பிரிவில் மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வருபவர் என தகவல் வெளியானது.
அதற்கு, தமிழ்நாடு பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் ரங்கநாயகுலு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கஞ்சா வேட்டை
கஞ்சா தடுப்பு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தமிழ்நாடு போலீசார், ஓரிரு நாட்களுக்கு முன்னர் 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர். சென்னை போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா கடத்தி வந்த சூர்யா, பிரவீன் என்ற 2 இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா கடத்துவது தெரியவந்தது.

வினோத் குமார்
இதையடுத்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்களை பத்திரிகையாளர் என்று கூறி போலியான அடையாள அட்டையை காண்பித்துள்ளனர். மேலும் தங்கள் கும்பலின் தலைவன் திருவேற்காட்டை சேர்ந்த வினோத் குமார் என்றும், அவர் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

பாஜக நிர்வாகி?
இதையடுத்து வினோத் குமாரை தீவிரமாக தேடி வந்த போரூர் தனிப்படை அதிகாரிகள், வினோத் குமாரையும் அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர்கள் தேவராஜ், பாலாஜி உள்ளிட்டோரையும் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து வினோத் குமாரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட வினோத் குமார் பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார் என்று ஒரு தகவல் பரவியது. வினோத் குமார் பாஜகவில் பொறுப்பில் இருப்பதாக ஒரு விசிட்டிங் கார்டும் சமூக வலைதளங்களில் பரவியது.

பாஜக விளக்கம்
இந்நிலையில், கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் குமார், பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளராக இருப்பவர் என்று பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, வினோத் குமார் பாஜகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என தமிழ்நாடு பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகலு விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications