2000 ரூபாய்க்காக பறிபோன உயிர்.. ப்ரீத்தியை தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்ட குற்றவாளிகள்.. நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் செல்போன் பறிப்பின்போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விக்னேஷ், மணிமாறன் ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்றும், உயிரிழந்த இளம்பெண் ப்ரீத்தியின் செல்போன் ரூ.2000-க்கு விற்கப்பட்டதாக குற்றவாளிகள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை இந்திரா நகரில் கடந்த ஜூலை 2ஆம் தேதி ப்ரீத்தி என்ற இளம்பெண் மின்சார ரயிலில் பயணம் செய்த போது அவரது செல்போனை இளைஞர்கள் இருவர் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது தனது செல்போனை காப்பாற்றிக் கொள்ளப் போராடிய ப்ரீத்தி, தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ப்ரீத்தி இன்று உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பழைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பெயர்களையும் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், அடையாரைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். போலீசார் கூறுகையில், கடந்த 2ஆம் தேதி சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்த பெண்ணை பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பெண்ணின் செல்போன் மாயமானது தெரியவந்தது. பின்னர் அந்த செல்போனை ட்ராக் செய்தபோது ராஜூ என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது செல்போனை 2 ஆயிரம் ரூபாய்க்கு இருவர் அவரிடம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (27) அடையாரைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தோம். இந்திரா நகர் ஸ்டேஷனில் ரயில் நின்று புறப்படும்போது, ப்ரீத்தி செல்போனை பறித்ததும், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ப்ரீத்தியின் செல்போன் ரூ.2000-க்கு விற்கப்பட்டதாக குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications