சென்னை: சென்னையில் கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின் மீது இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னையில் நகரின் உள்ள மிக முக்கிய மேம்பாலங்களில் ஒன்று கத்திப்பாரா மேம்பாலம்.. கிண்டியில் உள்ள இந்த கத்திப்பாரா மேம்பாலம் தான் ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவ மேம்பாலமாக இருக்கிறது.
இந்த பகுதியில் நிலவும் டிராபிக் நெரிசலைக் குறைத்ததில் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த பாலத்தில் நள்ளிரவிலும் கூட வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.
இளைஞர்: இதற்கிடையே இன்று காலை இந்த மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. அந்த இளைஞர் வடபழனி செல்லும் சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கத்திப்பாரா மேம்பாலத்தில் போரூர் வழியாகச் செல்லும் வளைவில் அவர் தனது டூவிலரை நிறுத்தியுள்ளார்.
தற்கொலை: திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். மேம்பாலத்தின் மீது இருந்து இளைஞர் குதிப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த இளைஞரின் உடலை மீட்டனர்.
பின்னர் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு இளைஞரின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து உடல் இப்போது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இளைஞரின் தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரணை செய்தனர்.
போலீஸ் விசாரணை: முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட அந்த இளைஞர் சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரிய வந்தது. 24 வயதான சாமுவேல் ராஜ் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம் போல வெளியே கிளம்பி இருக்கிறார். தனது இரு சக்கர வாகனத்தில் வடபழனி செல்லும் சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கித் திரும்பிய அவர், திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கத்திப்பாரா மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
என்ன காரணம்: மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதாவது சாமுவேல் ராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎல் தொடருக்குத் தயாராகி உள்ளார். இருப்பினும், இரண்டு ஆண்டுகளும் அதற்குத் தேர்வாகாத நிலையில், மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டால் அல்லது தற்கொலை எண்ணம் வந்தால் அதிலிருந்து விடுபட தமிழக அரசின் உதவி மையம் - 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கவும்