கொடைக்கானல் குணா குகை அருகே இளைஞர் செய்த காரியம்.. நடுங்கி போன பயணிகள்! ரீல்ஸ்க்காக இப்படியா?
நீலகிரி: கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் ரீல்ஸ் போடுவதற்காக ஆபத்தான முறையில் வீடியோ எடுத்த சம்பவம் சுற்றுலா பயணிகளை ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய செய்தது. குணா குகை அருகே ஆபத்தான பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியை பொருட்படுத்தாமல், அந்த கம்பிகளுக்கு இடையே இருந்த இடைவெளிக்குள் புகுந்து சென்று வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகிறார்கள்.
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், கொடைக்கானல் பகுதியில் நிலவும் இதமான சூழலை அனுபவிக்கும் வகையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கிறார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் கடுமையான கூட்டம் நிலவுகிறது.

ஆபத்தான செயல்களில்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நிலவிய இதமான பருவ நிலையை அனுபவித்தும், இயற்கை அழகினை கண்டு ரசித்தும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர். வனப்பகுதிகளில் உள்ள பில்லர் ராக்ஸ், குணா குகை, பைன் மரகாடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தும், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொண்டும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.
மேலும் ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இளைஞர்கள் பலரும் ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதையும் காணமுடிகிறது. சுற்றுலாப் பயணிகள் சில நேரம் எச்சரித்தாலும் கூட சில இளைஞர்கள் எல்லை மீறி ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
தடுப்பு கம்பியை தாண்டி
இந்த நிலையில்தான், சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் குணா குகை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியை தாண்டி வீடியோ எடுத்து பதிவிட்டு இருப்பது பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. பல அயிரம் அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் இருந்து ஆபத்தான பள்ளத்தாக்கு விளிம்பு பகுதியில் நின்று கொண்டு ரீல்ஸ் எடுத்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆபத்தை உணராமல் இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்களை பதிவிட்டு அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், இன்றைய இளைஞர்கள் பலரும் பைக்குகளில் ஸ்டண்ட் செய்வது, உயிரை பணயம் வைத்து ஆபத்தான காரியங்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது.
பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக ரீல்ஸ் எடுப்பது, கோவில்களில் சினிமா பாடல்களுக்க்கு ஆபாச நடனம் ஆடுவது என இன்றைய கால இளைய தலைமுறையினர் செய்யும் செயல்கள் முக சுளிக்க வைப்பதாகவும் இதற்கு கடிவாளம் போட வேண்டும் என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications