ஆருத்ரா மோசடி வழக்கில் சிறை சென்றவர் கடத்தல்- சில மணி நேரங்களில் 7 பேரை கைது செய்த போலீஸ்
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் சிறை சென்றவர் கடத்தப்பட்டதாக அவரது தாய் கோயம்பேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் கோயம்பேடு போலீஸார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இங்கு ஒரு லட்சம் பேர் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். அப்படி முதலீடு செய்த ரூ 2,438 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன் பேரில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்பட 21 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வழக்கில் நடிகர் ரூசோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷை போலீஸார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரியலூரை சேர்ந்த செந்தில் குமார், புழல் சிறையில் 97 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது நிபந்தணை ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் கடந்த 2 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் அரியலூரிலிருந்து அவருடைய உறவினர் வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு சென்னை வந்தார் செந்தில் குமார். அப்போது கோயம்பேடு சீமாத்தம்மன் நகரில் உள்ள உறவினர் முருகன் வீட்டுக்கு சென்ற போது செந்தில் குமார் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

இது குறித்து அவருடைய தாய் லதா கோயம்பேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். அது போல் செந்தில்குமாரின் மனைவி சரண்யாவை மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செந்தில் குமார் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். எனவே முதலீட்டாளர் யாராவது அவரை கடத்தினார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து 7 பேரை கைது செய்தனர். செல்வம் (38), பாலாஜி (27), அஜித்குமார் (27), விக்னேஷ் (25), சிவா (21) உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications