மேட்ரிமோனியலில் இளம்பெண்களை குறி வைத்த சூர்யா.. செல்போனில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்
சென்னை: மேட்ரிமோனியலில் திருமணத்திற்கு பதிவு செய்யும் பெண்களை தனியாக வரவழைத்து அவர்களுடன் தனிமையில் இருந்துவிட்டு அதை வீடியோவாக எடுத்து மிரட்டி 100 சவரனுக்கு மேல் பெற்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர் பெங்களூர் உளவுத் துறை போலீஸாரின் மகன் என கூறப்படுகிறது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது பெங்களூரைச் சேர்ந்த உளவுத் துறை எஸ்பியாக பணிபுரிந்து வருவதாகக் கூறி சூர்யாவும் பெண் தேடுவதாக அந்த மேட்ரிமோனியில் விவரங்களை பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சூர்யா, வீட்டில் பெண் பார்க்க வருவதாக சொல்லியுள்ளார். சொன்னது போல் அந்த பெண்ணின் வீட்டிற்கு தனியாக வந்த அவர் அந்த பெண்ணிடம் நன்கு பேசி பழகியுள்ளார். மேலும் தான் மத்திய மனித உரிமை ஆணையத்தில் விசாரணை அதிகாரியக பணியாற்றி வருவதாக பெண் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் வரவில்லை
பெண் பார்க்க பெற்றோர் வரவில்லையா என கேட்ட போது அவர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதாக சொல்லியுள்ளார். பெண் வீட்டாரும் இதை நம்பிவிட்டனர். மேலும் சூர்யா அரசு அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறியதால் பெண் வீட்டாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து அவ்வப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த சூர்யா, குடும்பத்தினருடன் நெருங்கி பழகியுள்ளார்.

தனிமையில் சந்திப்பு
திருமணம் செய்து கொள்ள இருவரும் சந்தித்து பேசினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் என்றும் இதனால் திருமண பந்தம் கடைசி வரை நல்லநிலையில் நீடிக்கும் என்றும் எத்தனையோ திருமணங்கள் புரிதல் இல்லாததால் விவாகரத்தில் முடிகிறது என நல்லவர் போல் பேசியதாக தெரிகிறது.

இப்படி ஒரு பிள்ளையா
"இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா" என பெண் வீட்டார் உருகியுள்ளனர். மேலும் தன்னை தனியாக சந்திக்க வருமாறு சூர்யா சொன்னதை நம்பி அந்த பெண்ணும் தனியே சென்றார். அப்போது இருவரும் தனிமையிலிருந்த போது அதை வீடியோவாக எடுத்து கொண்டார் சூர்யா. பின்னர் அந்த பெண்ணை ஏமாற்றி ரூ 7 லட்சம் பணத்தை பறித்து கொண்டு செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

உணர்ந்த பெண்
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்து கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்தனர். அவர் கோவையில் தனியார் விடுதியில் இருப்பதை அவரது செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்து வேறு ஒரு பெண்ணுடன் இருந்த சூர்யாவை சென்னை கானத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக் தகவல்கள் வெளியானது.

ஆபாச வீடியோக்கள்
அதில் சூர்யா இதுவரை 50 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. அதிலும் மேட்ரிமோனியில் பதிவு செய்த பெண்களை குறி வைத்து திருமண ஆசை காட்டி அவர்களுடன் நெருங்கி பழகி ஏமாற்றியுள்ளார். அத்துடன் தனியாக விடுதிக்கு வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டது தெரியவந்தது.
Recommended Video

இணங்க வைத்த சூர்யா
சென்னை, திருச்சி, செங்கல்பட்டு, புதுவை உள்ளிட்ட இடங்களில் இவர் கைவரிசை காட்டியுள்ளதும் தெரியவந்தது. மேலும் வீடியோவை காட்டி மிரட்டி தனது இச்சைக்கு பெண்களை இணங்க வைத்த சூர்யா அவர்களிடம் இருந்து 100 பவுனுக்கு மேல் நகைகளை பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்த போலீஸார் சூர்யாவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications