Savukku Shankar: 10 மணி நேரத்திற்கு பிறகு! கடப்பாரையால் கதவை உடைத்து! சவுக்கு சங்கர் கைது
சென்னை: அவதூறாக பேசி தன்னிடம் ரூ 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் பேரில் போலீஸார் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலை முதலே அவரது வீட்டிற்கு இரு வேன்களில் வந்த போலீஸார் அவரது வீட்டுக் கதவை கடப்பாரையால் உடைத்து கைது செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சவுக்கு சங்கர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "நானும் மாலதி, மொத்த சவுக்கு மீடியா டீமும் கைது செய்யப்பட இருக்கிறோம். கீழே இரண்டு போலீஸார் வேன்களில் 20 பேர் காத்திருக்கிறார்கள்.

சம்மனை கொடுங்கள் என எனது வழக்கறிஞர் கேட்டால் கொடுக்க மறுத்து கதவை திறக்க வேண்டும் என தொடர்ந்து சென்னை மாநகர போலீஸார் தன்னை மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சவுக்கு சங்கரை கைது செய்ய போலீஸார் அதிகாலையிலேயே அவரது வீடு முன்பு குவிந்ததாக தெரிகிறது. அவர்கள் வந்ததை அறிந்த சவுக்கு சங்கர் கதவை திறக்க மறுத்துவிட்டாராம்.
இதை காவல் துறை அதிகாரி ஒருவர் தனது உயர் அதிகாரிக்கு போனில் தகவல் கொடுத்தார். "சார் தனது அட்வகேட் வந்தால் மட்டுமே கதவை திறப்பேன் என்று கூறுகிறார்" என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவிக்கிறார்.
அவர் மேலும் இன்னொருவரிடம் கூறுகையில், 3 வழக்கறிஞர்கள் வந்தும் எங்களை வீடியோதான் எடுக்கிறார்கள். சம்மனை ஏற்கெனவே அவருக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் எங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறீர்கள், எவ்வளவு நேரம் காத்திருப்பது, அதனால் கைது செய்கிறோம் என அந்த போலீஸ் அதிகாரி கூறுகிறார்.
சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: "சென்னை மாநகர காவல் துறை என்னை கைது செய்ய வந்திருக்கிறது. நான் இன்நும் கதவை திறக்கவில்லை, வழக்கறிஞர் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
போலீஸாரோ உடனே கதவை திறங்கள் என்கிறார்கள். அக்டோபர் இறுதியில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து ஒரு சம்மன் வந்தது. என்ன வழக்கு என பார்த்தால், ரெட்டன் ஃபாலோ என்ற ஒரு படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன் என்பவர் கடந்த ஜூன் 30ஆம் தேதி என் அலுவலகத்திற்கு வந்து என்ன பத்தி அந்த வீடியோவில் தப்பா பேசிட்டீங்க, அந்த வீடியோவை நீக்குங்கள் என சொன்னதாகவும் நான் , மாலதி உள்ளிட்டோர் சேர்ந்து அவரை அடித்து ரூ 10 லட்சம் கொடுத்தால்தான் வீடியோவை நீக்குவோம் என சொன்னதாகவும் அப்போது அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு விட்டதாகவும் அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இது முழுக்க பொய் வழக்கு. இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என யாரும் என் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை என்னுடைய விளக்கமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1ம் தேதியே பதில் கடிதம் அனுப்பி விட்டேன்.
இதுவரை காவல்துறை தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. நேற்று இரவு ஒரு முறைகேடு குறித்து விவரங்களை வெளியிட்டதும் அதிகாலையில் இதே வழக்கில் கைது செய்ய போலீஸார் வந்துள்ளனர். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வழக்கறிஞர் வந்த பிறகு தான் கதவு திறக்கப்படும் என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது சவுக்கு சங்கரின் வீட்டுக் கதவை உடைக்க கடப்பாரையுடன் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் லிப்டில் கடப்பாரையுடன் செல்லும் காட்சி, வீட்டுக் கதவை இடிக்க முயலும் காட்சிகளையும் சவுக்கு சங்கர் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தனது சமூகவலைதள பக்கத்தில் அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்ட சவுக்கு சங்கர், தனது வீட்டுக் கதவை உடைக்க கடப்பாரையுடன் தீயணைப்புத் துறையினர் வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் அவர்கள் அவரது வீட்டு ஃலிப்டில் செல்வது போலவும், சவுக்கு சங்கரின் வீட்டு கதவை திறப்பது போன்றும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தில் தற்போது சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications