யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்.. தமிழக அரசை கடுமையாக வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்
சென்னை: சென்னை நந்தனம் பகுதியில் பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இதயப் பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சவுக்கு சங்கருக்கு 2026ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. விமர்சனம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது தவறு என்று தமிழக அரசை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர். இவர் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் திமுகவையும், தமிழக அரசின் காவல் துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் கடந்த தி போலீசார் சவுக்கு சங்கரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

ஜாமீன் தர கோரிக்கை
இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிறையில் உள்ள தனது மகனான சவுக்கு சங்கருக்கு கார்டியாலஜிஸ்ட் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் பி.தனபால் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கருக்கு 2025 டிசம்பர் 26 ல் முதல் 2026 மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சவுக்கு சங்கர் தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கும் நோக்கில் சவுக்கு சங்கர் செயல்படக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.
தீர்ப்பின் போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? நீங்கள் ஏன் செய்தியாளர்களுக்கு பின்னால் ஓடுகிறீர்கள்? கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். சட்டமன்றத்தில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால், நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெறலாம். அதற்கு உங்களை யாரும் தடுக்க முடியாது. தனி நபர் சுதந்திரம் என்ற விஷயத்தைத் தொட்டால் அது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் தலையிடுவதாக அமைந்துவிடும்.
மார்ச் 25 வரை ஜாமீன்
நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கவனத்தில் கொண்டும், சிறைக்கைதியின் மருத்துவ நிலை மற்றும் அவரது சுதந்திரம் மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தப்படுவதையும் கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுவிக்க தயாராக இருக்கிறது. 2026 மார்ச் 25 ம் தேதிக்கு முன்னர் அவர் அதிகாரிகளிடம் மீண்டும் சவுக்கு சங்கர் சரணடைய வேண்டும்.
சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் ஏன்
அதிகாரிகளின் நன்மதிப்பை இழந்த குறிப்பிட்ட நபர்களைக் குறிவைக்க சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டும். தனிநபருக்கு எதிராக தொடர்ச்சியாகக் காட்டப்படும் கடுமையான நடவடிக்கைகள், நாட்டின் குடிமக்களுக்கு சரியான மெசேஜை அனுப்பாது. அதிகாரிகளின் துஷ்பிரயோகம் மூலம் சவுக்கு சங்கரை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். அனைத்து காரணிகையும் கருத்தில் கொண்டு சவுக்கு சங்கர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பின்போது கூறினார்கள்.












Click it and Unblock the Notifications