இனி பைக்கை தொடக்கூட முடியாது! டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து! அதிரடி உத்தரவு
சென்னை: அதிவேகமாக பைக்கை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகக் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர்களில் ஒருவரான டிடிஎஃப் வாசன். இணையத்தில் இவருக்கு மிகப் பெரிய பாலோயர்கள் உள்ளனர். குறிப்பாக 2கே கிட்ஸ் தான் இவருக்கு அதிகம் ரசிகர்களாக உள்ளனர். கோவையைச் சேர்ந்த இவர் நடத்திய நிகழ்ச்சிக்கு யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பல ஆயிரம் பேர் குவிந்தனர்.

இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதிக சக்திவாய்ந்த பைக்குகளை மின்னல் வேகத்தில் சாலைகளில் ஓட்டுவதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
டிடிஎப் வாசன்: அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு வருகிறார். பொதுமக்கள் அனைவருக்கும் செல்லும் சாலையில் இப்படி முறைகேடாக அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதே சர்ச்சைக்குக் காரணம்.. இவர் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டி மிக வேகமாக பைக் ஓட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் அவருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் அனைவருக்குமே ஆபத்து தான். இதனால் இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
அதிலும் கடந்த சில காலமாகவே இவர் வரிசையாகப் பல சர்ச்சைகளில் சிக்கினார். இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் அவர் விபத்து ஒன்றில் சிக்கினார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வீலிங் செய்ய முயன்ற போது விபத்தில் சிக்கினார். சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் சென்ற போது ஸ்டண்ட் செய்ய முயன்றார். அப்போது விபத்தில் சிக்கினார்.
விபத்து: அதிவேகமாகச் செல்லும் போது அவர் வீலிங் செய்ய முயன்ற நிலையில், அவரது பைக் நிலைதடுமாறி இரண்டு முறை தலைக்குப்புற சுற்றி பள்ளத்தில் விழுந்தது.. இதனால் அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைதும் செய்யப்பட்டார். யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையே யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுநர் உரிமம் ரத்து: விபத்து குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அது குறித்து அவர் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதையடுத்து யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்து 2033 அக். மாதம் வரை டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகக் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் தான் வீலிங்கே செய்யவில்லை என்றும் எதிர்பாராத விதமாக பைக் முன் டயர் தூக்கிவிட்டதாக கூறினார். மேலும், அவர் ஜாமீன் கோரி பல மனுக்களைத் தாக்கல் செய்த போதிலும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. குறிப்பாக டிடிஎப் வாசனின் பைக்கையே எரித்துவிடலாம் என்றும் நீதிமன்றம் காட்டமான கருத்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications