Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையே அதிரனும்..சாதி பாட்டு எழுதச் சொன்ன இயக்குநர்? உண்மையை உடைத்த யுகபாரதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு திரைப்பட இயக்குநர் தன்னை சாதியின் பெருமையைப் பற்றிப் பாடல் எழுதச் சொன்னதாகவும், அப்படி எழுதும் போது அதில் எந்தத் தலைவர்களின் பெயர்களை எல்லாம் சேர்க்க வேண்டும் என்று பட்டியல் போட்டு தந்ததாகவும் பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்றைக்கு உள்ள திரைப்பட பாடலாசிரியர்களில் தனித்துவமான கவிஞர் யுகபாரதி. அவர் பாடல்களில் பயன்படுத்தும் புதுப் புது தமிழ்ச் சொற்கள் மனதை மயக்கும் அளவுக்கு மணம் வீசக் கூடியவை. 'எள்ளு வயல் பூக்கலையே?' என்ற வரியை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. 'மண்ணிலே ஈரமுண்டு,முள் காட்டி பூவும் உண்டு' என்ற பாடலைக் கேட்பவர்கள் புதிய உயிரையே பெறுவார்கள். இவர் இதுவரை 2 ஆயிரம் பாடல்கள் மேல் எழுதி இருக்கிறார். இவை மட்டும் இல்லாமல் இப்போது சங்க இலக்கிய கவிதை வரிகளை அவரது பார்வையில் விளக்கி எழுதிய 'மேல் கணக்கு' புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Yugabharathi Tamil cinema

மேலும் அவர் தனது திரைத்துறையில் முன்னோடிகளாக இருந்த பாடலாசிரியர்களைப் பற்றியும் அவர்களது வரிகளைப் பற்றியும் வியந்து 'நேற்றைய காற்று' என்ற நூலை எழுதி இருக்கிறார். அதில் மொத்தம் 20 சீனியர் பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களை வரிக்கு வரி பாராட்டி எழுதி இருக்கிறார். சமீபத்தில் திரைப்படம் விமர்சனம் பற்றிய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய யுகபாரதி சினிமாவுக்குள் சாதியைப் பற்றிய புரிதல் எப்படி இருக்கிறது என்பது பற்றி மிக வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.

யுகபாரதி தனது பேச்சில், "சென்னைக்கு வந்த புதிதில் நான் ராஜரிஷி என்ற ஒரு பத்திரிகையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது 'இருவர்' திரைப்படம் வெளிவந்திருந்தது. அந்தப் படத்திற்குக் கவிஞர் இன்குலாப்பிடம் ஒரு விமர்சனம் வாங்கி வெளியிட வேண்டும் என்று அதன் ஆசிரியர் சொன்னார். அவர் எழுதப் போகும் கட்டுரையைக் கேட்டுப் பெறுவதற்காக அவரை நேரில் சென்று பார்த்து விசயத்தைச் சொன்னேன். அவர், 'படம் நான் பார்க்கவே இல்லை?' எப்படி எழுதுவது என்று கேட்டார். பார்த்துவிட்டு எழுதுங்கள் என்றேன். அவர் 'படத்தைப் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?' என்றார்.

நான் 'கருணாநிதியைக் கொஞ்சம் குறைத்துக் காட்டி இருக்கிறார்கள்' என்றேன். அவர், 'அப்படியா? நான் இரண்டு நாள் வெளியூர் போகிறேன். அதன் பிறகுதான் படம் பார்க்க முடியும். அப்படிப் பார்த்த பிறகு என்னால் எழுத முடியாது. ஏனென்றால், படத்தில் கருணாநிதியைக் குறைத்துக் காட்டி உள்ளார்கள் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதை மனதில் வைத்துத்தான் நான் படத்தைப் பார்ப்பேன். ஆகவே, அது என் கருத்தாக இருக்காது. நான் எழுதினால் அது நல்ல விமர்சனமாக வராது' என்று தவித்துவிட்டார்.

நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் இருந்த பார்வை, உள்ளே வந்த பிறகு சுத்தமாக மாறிவிட்டது. ஏனென்றால், வெளியிலிருந்து சினிமாவைப் பற்றி மார்க்சிய பார்வையில் அல்லது தமிழ்த் தேசிய பார்வையில், திராவிடப் பாவையில் எல்லாம் விமர்சனங்கள் எழுதுகிறார்கள். ஆனால், உண்மையில், அந்தப் புரிதலுடன் தான் சினிமாவிற்குள் இருப்பவர்கள் படம் எடுக்கிறார்களா என்பதே மிகப்பெரிய கேள்வி. நான் சினிமாவுக்குள் இருந்து பார்த்தவரை அப்படியான பார்வை எல்லாம் படம் எடுப்பவர்களுக்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

சமீப காலமாக தலித் திரைப்படங்கள் வந்துகொண்டுள்ளன. இன்னொரு பக்கம் எதிர் தலித் என்று பார்வையில் சில படங்கள் வருகின்றன. ஒரு இயக்குநர் என்னிடம் பாட்டு எழுதுவதற்காக வந்தார். நான் அவரது படங்களுக்குப் பாட்டு எழுதிக் கொண்டிருந்தேன். அவர் என்ன சமூகம் என்று எனக்குத் தெரியாது. நான் என்ன சமூகம் என்று பார்த்து அவர் பாட்டு கொடுத்ததில்லை. ஒருமுறை ஓபனிங் சாங் எழுத வேண்டும். அந்தப் பாட்டைக் கேட்டால் தென் மாவட்டங்கள் எல்லாம் பத்தி கொள்ள வேண்டும் என்றார்.

உடனே அவர் பாட்டுக்குள் சில தலைவர்களின் பெயர்களை எல்லாம் சேர்த்து எழுத வேண்டும் என்றார். அவர் சொன்ன தலைவர்களின் பெயரில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் பெயரும் இருந்தது. அதைக் கேட்டுவிட்டு நான், 'இவர் நீங்கள் சொல்லும் சமூகம் இல்லை. இவர் நாயக்கர் சமூகமாச்சே?' என்றேன். உடனே அந்த இயக்குநர் 'அப்படியா சார்? அவர் நம்ம ஆளு இல்லைங்களா? வேண்டுமானால் அவரை மட்டும் நீக்கிவிடுவோம்' என்று சொல்லிக் கட்டப்பொம்மனையே கழற்றிவிட்டார்.

அதன் பின் அவர் அடுத்த படம் எடுத்தார். ஆனால், அவர் என்னிடம் பாட்டுக் கேட்டு வரவில்லை. வேறு சிலரை வைத்து எழுத வைத்தார். உடனே நான் அவரை தொலைபேசியில் அழைத்து, 'போன முறை வீரபாண்டிய கட்டப் பொம்மன் நம்ம சமூகம் இல்லை என்று சொன்னதால் கோபித்துக் கொண்டு இந்தப் படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு தரவில்லை போல் இருக்கிறது? அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை. இந்தப் புதிய படத்தில் மதுரை வீரன் என்று ஒரு பாட்டு வருகிறது. அவரும் உங்கள் சமூகத்து ஆள் இல்லையே?' என்றேன்.

அதைக் கேட்ட அவர், 'அப்படியா அண்ணே? இந்தப் பசங்க அதை சொல்லவே இல்லையே?' என்று சொல்லிவிட்டு வேறு வேறு படங்களை எடுக்க போய்விட்டார். படம் எடுக்கும் இயக்குநர்களிடம் சாதியைப் பற்றிய புரிதல் இவ்வளவுதான் இருக்கிறது. அவர்கள் பெரிய திட்டமிட்டு ஆய்வு செய்து எல்லாம் இதை எல்லாம் படத்தில் வைப்பதில்லை.

அப்படித்தான் 'கும்கி' படத்தில் கிளைமேக்ஸ் காட்சி பல மாதிரி எடுத்திருந்தோம். அதில் ஒரு கிளைமேக்ஸ் காட்சி ஒட்டுமொத்த நபர்களும் தீயில் கருகி இறந்து போவதைப் போல காட்டி இருந்தார் இயக்குநர். அதைப் பார்த்த விக்ரம் பிரபு அப்பா பிரபு தேம்பித் தேம்பி அழுதார். நாங்கள் கிளைமேக்ஸ் எல்லோர் மனதையும் உலுக்கி விட்டது. அதுதான் இப்படி அழுகிறார்கள் என்று நினைத்தோம்.

ஆனால், பிரபு, 'என் மகனின் முதல் படம் இது. அதில் அவரை செத்துப் போவதைப் போலக் காட்டி இருக்கிறீர்களே? அதை ஏற்க முடியவில்லை. கிளைமேக்ஸ் காட்சியைத் தயவு செய்து மாற்றுங்கள்' என்றார். அதன் பிறகு விக்ரம் பிரபு மட்டும் உயிர் பிழைப்பதைப் போல வைத்தார்கள். ஆக, சினிமா இப்படித்தான் உருவாகிறது. ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் ஏதோ கோட்பாடுகளை எல்லாம் வைத்துப் பார்க்கிறார்கள்" என்று பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+