அவசரம்! நாளை காலை அனைத்து கட்சி கூட்டம்.. டெல்லியில் இருந்து கேரளா கிளம்பிய முதல்வர் பினராயி விஜயன்!
கொச்சி: கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவசரமாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. கிறிஸ்தவர்களின் ஜெஹோவா விட்னஸ் வழிபாட்டு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாநாட்டு மையத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

களமச்சேரியில் ஜெஹெவா விட்னஸ் பிரிவினரின் இந்த மாநாடு கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. மாநாட்டின் கடைசி நாளான இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் மாநில தீவிரவாத தடுப்புப் படையும், கேரள போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் வெடித்தது IED வகை டிபன் பாக்ஸ் குண்டு என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார். வெடிகுண்டு வெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், "கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது IED வகை டிபன் பாக்ஸ் குண்டு. இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்தது கண்டறியப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயங்கரவாத சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன." எனத் தெரிவித்தார்.
பிரார்த்தனை கூட்டத்தில் நடந்தது வெடி விபத்து அல்ல குண்டு வெடிப்பு என உறுதிப்படுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன், களமச்சேரியில் நடந்த குண்டு வெடிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார். இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்தார்.
இந்நிலையில், கேரளா களமச்சேரியில் கிறிஸ்தவ மதத்தின் ஜெகோபா விட்னஸ் பிரிவினர் பங்கேற்ற மாநாடு மற்றும் வழிபாட்டுக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற போது பினராயி விஜயன் டெல்லியில் இருந்தார். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
எனவே, குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் உடனடியாக பினராயி விஜயனுக்கு தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக டெல்லியில் இருந்து தற்போது கேரளாவுக்கு பினராயி விஜயன் கிளம்பியுள்ளார். இன்று மாலைக்குள் அவர் கேரளாவிற்கு வந்தவுடன் குண்டு வெடிப்பை பற்றி காவல்துறையினரிடம் விரிவான விவரங்களை கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை 10 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications