சபரிமலையில் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபருக்கு நிரந்தர வருவாயே இல்லை! தேவஸ்வம் போர்டு ஷாக்
கொச்சி: சபரிமலையில் தங்கமுலாம் பூசும் பணிகளுக்கான செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவருக்கு நிரந்தரமான எந்த வருவாயும் இல்லை என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழல் கண்காணிப்பு பிரிவு இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இருமுடி கட்டிக் கொண்டு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த கோயிலை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக 9 தேவஸ்வம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கமுலாம் பூசும் செலவை கர்நாடகா மாநிலத்தை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தங்கம் மாயம் குறித்த விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. அது போல் தேவஸ்வம் போர்டு சார்பில் ஊழல் கண்காணிப்பு பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்த இறுதி அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரின் வருவாய் குறித்து பட்டய கணக்காளரை வைத்து ஆய்வு செய்தோம். அதில் அவருக்கு நிரந்தரமான வருவாய் ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் கருவறை கதவுக்கு தங்க முலாம் பூசும் செலவை போத்தி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அதற்கான செலவை செய்தது கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த கோவர்தனன், அஜித்குமார் ஆகிய இரு தொழிலதிபர்கள்தான்.
அதே வேளையில் உன்னிகிருஷ்ணன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சில நன்கொடைகளை வழங்கியுள்ளார். அவரது செலவில் நிகழ்ந்த பல்வேறு பணிகள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என அந்த இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துவாரபாலகர்கள் சிலைகள், கோயில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான அந்த இரு வழக்குகளிலும் தொழிலதிபர் போத்தி பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்வம் போர்டு அதிகாரி பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சொந்தமான சிறு துண்டு தங்கத்தையும் திருட்டு போக விட மாட்டோம். 1998ஆம் ஆண்டு விஜய் மல்லையா வழங்கிய தங்கம் தொடர்பாக விசாரணை நடக்கட்டும். சிறப்பு விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்கட்டும்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்ற ஊழியர்களாக இருந்தால் விசாரணை முடிவு வந்ததும் அவர்களின் பென்ஷன் நிறுத்தப்படும் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சபரிமலை தொடர்பாக மர்மமான கதைகள் கூறுவதற்கு முடிவு ஏற்பட வேண்டும்.
உன்னிகிருஷ்ணனிடம் துவார பாலகர்களின் தங்கக் கவசங்களை கொடுத்தனுப்ப வேண்டும் என நான் கூறவில்லை. அப்படியே நான் கொண்டு செல்லக் கூறியதாக நிரூபித்தால் உடனே ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு அவரிடம் தங்கக் கவசங்களை கொடுத்தனுப்ப வேண்டாம் என்றுதான் கூறினேன். சபரிமலையில் இருந்து எடுத்துச் சென்ற அனைத்து தங்கங்களையும் மீட்போம்" என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications