பணம் வரலை.. அடுத்த சிக்கல்.. கோவை my v3 ads நிறுவனம் மீது அடுத்தடுத்து 2 புதிய புகார்கள்
கோவை: பொதுமக்களிடம் இருந்து அதிக முதலீடு பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக கோவை my v3 ads நிறுவனம் மீது குற்றப்பிரிவு போலீசில் மேலும் சிலர் புகார் அளித்துள்ளனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு MyV3ads என்ற நிறுவனம் மருந்து பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் அந்த நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம் என்றும், அந்த செயலி மூலம் அனுப்பப்படும் வீடியோக்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் அறிவித்தது.

மேலும் இவ்வாறு விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.5 மூலம் ரூ.1,000 வரை பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த தனியார் நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த MyV3ads ஆப்பை கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் முதலீடு செய்து உறுப்பினர்களாக பதிவு செய்து செய்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனம் எவ்வித வருவாயும் இன்றி, அதில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு எவ்வாறு அதிகப்படியான தொகையை கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுந்தது.மேலும் மக்களை ஏமாற்றி பணம் வசூலித்து மோசடி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் பொதுமக்கள் சிலர் புகார் அளித்தனர். இதன்பேரில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்தியானந்த் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக கோவை எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்த ஜனவரி இறுதியில் திரண்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதற்கிடையில், அனுமதியின்றி திரண்ட இந்த கூட்டம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் சட்டவிரோதமாக கூடுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 5-ந் தேதி தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்தியானந்த் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். அப்போது சத்தியானந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் கம்பெனியில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எப்படி பணம் கொடுக்கப்படுகிறது?, மேலும் விற்கப்படும் பொருட்களின் விவரங்கள் குறித்து போலீசார் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.. அதற்கு நான் உரிய பதில் அளித்தேன். மேலும் என்னிடம் 87 வகையான விற்பனை பொருட்கள் இருக்கிறது... அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்களின் மாதிரிகளை சமர்பித்துள்ளேன். போலீசார் என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விளக்கம் அளிப்பேன் என்று கூறினார்..
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது நேற்று வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சாரா, ஸ்டாலின் உள்ளிட்டோர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.. இதில் சாரா அளித்த புகாரில், தான் கோவை my v3 ads நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் முதலீடு செய்ததாகவும், ஆனால் அவர்கள் கூறியபடி தனக்கு பணத்தை தரவில்லை என்றும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
முன்னதாக பாமக மாவட்ட நிர்வாகியும் வழக்கறிஞருமான அசோக் ஸ்ரீநிதி அளித்த புகாரில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் முதலீடு செய்த பொதுமக்களுக்கு அதிக விலைக்கு மாத்திரைகளை வழங்கி வருவதாகவும், இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் இதற்கு முன் வேறு பெயரில் நிறுவனம் தொடங்கி பொதுமக்களை ஏமாற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications