பொள்ளாச்சி தொகுதி யாருக்கு? மீண்டும் காய்நகர்த்தும் சிட்டிங் MP! சீட் ரேஸில் புதுமுகங்கள்!
கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. சண்முகசுந்தரம் மீண்டும் போட்டியிட சீட் கேட்கும் நிலையில், டாக்டர் மகேந்திரனும் வாய்ப்பு கிடைத்தால் விட வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறாராம்.
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமலைபேட்டை, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. பல ஆண்டுகளாக ரிசர்வ் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி, தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009ஆம் ஆண்டு தான் பொதுத்தொகுதியாக மாறியது. தென்னை விவசாயம், தேங்காய் வியாபாரம், இளநீர் வியாபாரம், தேங்காய் நார், பர்னிச்சர், உள்ளிட்ட தொழில்கள் பரவலாக உள்ளன.

பொள்ளாச்சி திமுக நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் அரசியல்வாதிக்குரிய எந்த அடையாளத்தையும் பார்க்க முடியாது. தொழிலதிபர் தோரணையிலேயே அரசியல் செய்பவர். தயாநிதி மாறன் ஸ்டைலில் பெரும்பாலும் கலர் ஷர்ட் கலர் பேண்ட் தான் அணிவார்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியை பொறுத்தவரை அதிமுக ஆதிக்கம் அதிகம் உள்ள தொகுதியாகும். ஆனால் அப்படியிருந்தும் கடந்த முறை திமுக அங்கு வெற்றிபெற்றது. வரும் தேர்தலிலும் திமுக வெற்றிபெறும் என்றே கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. இதனால் சீட்டுக்கு பலருக்கு முட்டி மோதி வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரமும் கோவையில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது கூடுதல் தகவலாகும். இதனால் நேரு மூலம் சீட் வாங்கிவிடலாம் எனக் கருதுகிறது சண்முகசுந்தரம் எம்.பி.தரப்பு. இதனிடையே மக்கள் நீதி மய்யத்திலிருந்து திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. தலைமை பார்த்து வாய்ப்பு கொடுத்தால் தட்டாமல் களம் காண மகேந்திரன் உறுதியாக உள்ளார். இவர்களை தவிர இன்னும் நான்கைந்து புதுமுகங்களும் சீட் ரேஸில் இருக்கிறார்கள்.
இதற்கு மத்தியில் பொள்ளாச்சி மற்றும் ஈரோடு ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றை ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொள்ளாச்சி தொகுதி யாருக்கு என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திமுக நின்றாலும் சரி, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினாலும் சரி இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருக்கிறது அதிமுக தரப்பு.












Click it and Unblock the Notifications