அயோத்திக்கு சிறப்பு ரயில்.. பக்தர்கள் உற்சாகம்.. அண்ணாமலை பூரிப்பு.. வழியனுப்பிய வானதி சீனிவாசன்
கோவை: தமிழகத்தில் இருந்து, அயோத்தி ஶ்ரீராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோவையில் இருந்து அயோத்தி சென்ற பக்தர்களை வானதி சீனிவாசன் வழியனுப்பி வைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அயோத்தியில் சரயு நதிக்கரையில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ராமர் குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடி ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயில் திறக்கப்பட்ட அடுத்த நாள் முதலே பக்தர்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.

அயோத்தி நகரில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடம், உணவகங்கள் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு, அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து வியாழக்கிழமை முதல் அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர்
நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன.
தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மானிய விலையில் ரயில் பயணக் கட்டணம், இலவச உணவு, இலவச தங்குமிடம், இலவச உள்ளூர் பயண சேவை மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அயோத்தி செல்வதற்கான முதல் சிறப்பு ரயில், இன்று மாலை, கோவையிலிருந்து புறப்படவிருக்கிறது. தமிழகத்தில் இருந்து, அயோத்தி ஶ்ரீராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
அயோத்திக்கு கோவையில் இருந்து முதல் ரயில் பக்தர்களுடன் புறப்பட்டது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், அனைவருக்கும் உணவு குடிநீர் வழங்கி வழியனுப்பி வைத்தார். அதனை தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இருந்து அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று கோவையிலிருந்து அயோத்தி செல்லும் சிறப்பு இரயிலை துவக்கி வைத்தேன். இப்புனித பயனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராமரின் தரிசனம் மன நிறைவுடன் அமைய வாழ்த்துகிறேன் என்று வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராம பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். காணிக்கையையும் தாராளமாக வாரி வழங்கி வருகின்றனர். அயோத்தியில் பக்தர்களின் வசதிக்காக சமீபத்தில்தான் உத்தரப்பிரதேச அரசு விமான நிலையம் திறந்தது. தொடர்ந்து, டெல்லி, சென்னை, பெங்களூரு என பல நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications