சயனைடு கலந்த தண்ணீர்.. கோவை தொழில் அதிபர் குடும்பமே உயிருடன் இல்லை.. உருக்கமான தகவல்
கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் தொல்லை காரணமாக இந்த முடிவினை தொழில் அதிபர் குடும்பம் எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை தெலுங்குபாளையம் மணி ரைஸ் மில் காலனியை சேர்ந்த 46 வயது ராமச்சந்திரன் மதுபாட்டில்களுக்கான மூடிகளை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார் இவருக்கு சொந்தமாக அரிசி ஆலையும் இருக்கிறது. ராமச்சந்திரன் மனைவி பெயர் விசித்திரா (42). இவர்களுக்கு 22 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், 14 வயதில் ஜெயநிதி என்ற மகளும் இருந்தனர்.

மகள் ஸ்ரீநிதி கனடாவில் படித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் படித்து முடித்துவிட்டு கோவை வந்துள்ளார். ஜெயநிதி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு, இவர்களது வீட்டில் வேலை செய்யும் சுமதி என்கிற பெண் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அப்போது வீட்டில் இருந்த ராமச்சந்திரன், வேலைக்காரியை இன்றைக்கு வேண்டாம் வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். இதனால் சுமதி தனது வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் இவர்களது வீடு நீண்டநேரமாக பூட்டிக்கிடந்ததால் அருகில் வசித்து வந்த ராமச்சந்திரனின் அக்காள் ராணி, மதியம் 12 மணியளவில் தம்பியின் வீட்டுக்கு சென்று, கதவை திறந்து உள்ளே போயிருக்கிறார்.
அப்போது ராமச்சந்திரன், மகள்கள் ஸ்ரீநிதி, ஜெயநிதி ஆகியோர் கட்டிலிலும், மனைவி விசித்திரா தரையிலும், வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி அலறியடித்து கொண்டு ஓடி வந்துள்ளார். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 4 பேரும் வெள்ளைநிற சயனைடில் தண்ணீர் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதை கண்டனர். தொடர்ந்து நடத்திய சோதனையில், தற்கொலைக்கு முன்பு ராமச்சந்திரனின் மனைவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் கணவரின் கடனால் தற்கொலை செய்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, தொழில் அதிபரான ராமச்சந்திரன், தான் வசிக்கும் பகுயிலேயே புதிய பங்களா வீடு கட்டி வந்துள்ளார். அதேநேரம் தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் வாங்கி உள்ளார். சொத்துகளை அடமானம் வைத்தும் ரூ.20 கோடிக்கு கடன் பெற்றுள்ளாராம். இதில் சில கடன்களை அடைத்துவிட்ட போதிலும் கடன் அதிகமாக இருந்துள்ளது.
இந்தநிலையில் மீண்டும் கடன் வாங்க மனைவி விசித்திராவை அவர் வற்புறுத்தினாராம். ஆனால் அதற்கு மனைவி மறுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த விசித்திரா சயனைடு விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்து குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை பார்த்த ராமச்சந்திரன், விரக்தியில் மீதமிருந்த சயனைடை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications