பட்டப்பகலில் கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளை சம்பவம்.. 3 பேர் கைது.. 91 பவுன் நகைகள் மீட்பு
Recommended Video
கோவை: கோவையில் பட்டப்பகலில் கட்டட கான்ட்ராக்டர் வீட்டில் புகுந்து திருடிய 3 கொள்ளையர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 91 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கட்டட கான்ட்ராக்டர் கார்த்திக். இவரது மனைவி தேமுதிக பிரமுகரின் மகள் மோனிஷா ஆவார். இவர்கள் சுப்பிரமணியம்பாளையம் என் பி சி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இவர்களது வீட்டில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சத்தியபாமா என்ற மூதாட்டி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர்கள் வெளியே சென்றிருந்தனர். மூதாட்டி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மதியம் 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் வந்து வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
கொள்ளை
ஜன்னல் வழியாக பார்த்த மூதாட்டி சந்தேகப்பட்டு கதவை திறக்கவில்லை. அதன் பின்பு அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை தாக்கினர். பின்னர் வீட்டினுள் இருந்த 33 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டனர்.
மயக்கம்
படுகாயமடைந்த மூதாட்டி செல்போன் மூலம் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மயக்கம் அடைந்துள்ளார். உடனே விரைவாக வந்த வீட்டின் உரிமையாளர்கள் மூதாட்டியை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீஸார்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அதனைத் தொடர்ந்து அவர்கள் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி துடியலூர் இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் விரைந்து வந்தனர்.
வாகன சோதனை
அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை எடுத்துக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடினர். கவுண்டம்பாளையம் துடியலூர் இடையார்பாளையம் தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
விசாரணை
அப்போது இடையார்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின்பு முரணாக தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
வழிப்பறி
அதில் அவர்கள் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தங்கராஜ், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான விக்கி என்கிற விக்னேஷ், பாலமுருகன் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் என் பி சி நகர் பகுதியில் கொள்ளையடித்ததும், அதேபோல துடியலூர் ஈஸ்வர பார்க் பகுதியில் உள்ள ஏர்போர்ஸ் கல்லூரியின் அலுவலர் வீட்டில் 54 போன் திருடியதும், மேலும் கவுண்டம் பாளையம் பகுதியில் மளிகை கடை வைத்திருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் செயினை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
பாராட்டு
அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 91 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை மாவட்ட எஸ்பி மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.