கோவையில் தோழனுடன் உடல் நசுங்கி உயிரிழந்த பெண் டாக்டர்.. அவினாசி சாலையில் பயங்கரம்
கோவை: கோவை அவினாசி சாலையில் நீலாப்பூரில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டாக்டர், போலீஸ்காரர் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த லோகநாதன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கண்மணி பிரியா (வயது 33). இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் சித்தா (பி.எஸ்.எம்.எஸ்) படித்து முடித்துவிட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணியாற்றி வந்தார்.

கண்மணி பிரியாவிற்கும் கோவை மாநகர போலீஸ் ஆயுதப்படையில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பெருமனூர் காட்டு வலசு பகுதியை சேர்ந்த ராஜா (25) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அத்துடன் கண்மணி பிரியாவுக்கு கோவையை அடுத்த நீலாம்பூர் ராஜீவ்காந்தி நகரில் பேச்சியம்மாள் என்ற தோழியும் உள்ளார்.
எனவே அவர் தனது தோழியை பார்ப்பதற்காக வியாழக்கிழமை காலையில் கோவை நகருக்கு வந்தார். பின்னர் கண்மணி பிரியா நீலாம்பூருக்கு சென்று தனது தோழியை சந்தித்து பேசினார். அத்துடன் அவர் கோவை மாநகர பகுதிக்கு வந்து தனது நண்பரான ராஜாவையும் சந்தித்து பேசியுள்ளார்
பின்னர் மாலையில் ராஜா, கண்மணி பிரியாவை அவருடைய தோழி பேச்சியம்மாள் வீட்டில் கொண்டு விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார். அவர்கள் 2 பேரும் கோவையை அடுத்த நீலாம்பூர் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக கோவை அவிநாசி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications